|
நரம
நரம்புக் கருவிகட்கெல்லாம் யாழ்
என்பது பொதுப்பெயர். வீணை என்னும் பெயர் பிற்காலத்தது. பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய
தமிழகத் தூர்ப்பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள்
வழங்குவது போன்றே, யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி
வருகின்றது. யாழ்கள் செங்கோடு(சிவப்புத் தண்டி), கருங்கோடு(கறுப்புத் தண்டி) என இருநிறத் தண்டிகளை
யுடையவையா யிருந்தன. செங்கோட்டையுடைய யாழ் செங்கோட்டியாழ், "கருங்கோட்டுச் சீறியாழ்"
எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில் Fiddle எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று
மேனாட்டிற்குச் சென்றதே. இதை மேனாட்டாரும் ஒப்புக்கொள்கின்றனர். இஃது இராவணனால் மிகுதியாய்ப்
பயிலப்பட்டதென்றும், அதனால் ‘இராவணாசுரம்’ எனப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி ஐந்தென்பர். மிடறு = தொண்டை, வாய்ப்பாட்டுக்
கருவி. மேற்கூறிய கருவிகளை யெல்லாம் தொன்றுதொட்டுச் செய்துவந்தவரும் இயக்கி வந்தவரும் தனித்
தமிழரே. அவர் பாணர், மேளக்காரர்(நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத்திற்கே மாதங்கி
(பாடினி) என்றுதான் பெயர்.
ஆரியப் பார்ப்பனர் ஆலாபன இசை
அறியாமை
பிராமணர் இசை பயிலக்
கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில்,
"பிராமணர் பாட்டுப் பாடுவது கூத்தாடுவது.... இப்படிக் கொத்த சாத்திர விருத்தமான கருத்தினால்
பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது" என்று கூறப்பட் டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு மந்திரம்
இசையோடு பாடப் படுவதே. ஆனால், அஃது ஆலாபன இசையன்று. வடமொழி வேத மந்திரங்கள் இப்போதுகூட
ஆலாபித்துப் பாடப்படுவதில்லை. உதாத்தம் அனுதாத்தம் சுவரிதம் என்னும் ஒலிப்பு வேறுபாடும்
மாத்திரைக் கணக்கும் வேதமந்திரத்திற்கு மிகக் கண்டிப்பானவை. ஓர் எழுத்துத் தவறாக ஒலிக்கப்
படினும் மந்திரத்தின் வலி குன்றிவிடுவதுடன் ஓதினவனுக்குப் பெருங் கேடும் விளையும் என்பது வடமொழியாளர்
கொள்கை. ஆதலால், காட்டாளத்தி பண்ணாளத்தி நிறவாளத்தி ஆகிய மூவகை ஆலாபனையும்
வடமொழி மந்திரத்திற்கில்லை என்பது தெளிவு. வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி வேதவொழுக்கத்தினின்று
தவறியதால், சில ஆரியப் பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர்
என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில்(புறஞ்சேரி. 35, 39) கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்நாட்டில்
இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே "பாண்சேரிப்
பற்கிளக்கு மாறு" என்னும் பழமொழியும் எழுந்தது. பாணபத்திரர்,
|