பக்கம் எண் :

112தமிழர் மதம்

    காவலிலுள்ள ஒரு நிறுவனம் எங்ஙனம் போற்றும்! அதை எதிர் பார்ப்பது எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடுவதே.

    என்னொடு தமிழன்பரான தமிழர் வேறு சிலரும் விடுதித் தாழ் வார அறையில் தங்கியிருந்தனர். பிராமணர்க்கோ உள்ளிடம். நண்பகலுணவு எங்கட்குப் பிற்பகல் 3 மணிக்குத்தான் வந்தது. கரணியம் வினவியபோது, அன்றுதான் பிராமணப் பந்தி முடிந்த தென்று தெரிவிக்கப்பட்டது.

    எனக்கு மடத்துப் பொருளுதவி தப்பியதுபற்றி எள்ளளவும் வருத்தமில்லை. தமிழர் குமுகாயநிலைத் தாழ்வே என்னை மிகமிகப் புண்படுத்தியது. நாடு தமிழ்நாடு; மடம் தமிழன் மடம்; மதம் தமிழன் மதம்; பணம் தமிழன் பணம். அங்ஙனமிருந்தும், தமிழன் நாய்போல் நடத்தப்படுவது இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கின்றதெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவனல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.

    பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறி டத்தில் உண்டி படைக்கப்படினும், ஒரே நேரத்திற் படைக்கப்பட்டி ருப்பின், ஓரளவு நன்றாயிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது வுண்டிச்சாலைகளில். பிராமணரின் எச்சிலைகளிலிருந்து கறிவகைகளை யெடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமாயிருந் தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந் நிலைமையாயின், இலவசமா யுண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

    மடம் துறவியர் பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப்படுவன கொண்முடிபும் மெய்ப்பொருளியலும். முப்பத்தாறென்று கொள்ளப்படும் மெய்ப் பொருள்களுள், குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின், ஏனை நாடுகளில் ஏன் அஃதில்லை? "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலரே சொல்ல வில்லையா?

    வேதம் ஓதித் திருக்கோயில் வழிபாடு நடத்தும் பிராமணப் பூசகனை ஒருவாறு உயர்வாகக் கருதினாலும், வேதமறியாது உழவு, கைத்தொழில், வணிகம், சமையல், கோழிப்பண்ணை, ஏவல், கணக்கம், ஆசிரியம், ஊர்காவல், ஆள்வினை முதலிய பல தொழில் களைச்செய்யும் பிராமணரையும் ஏன் உயர்வாகக் கருத வேண்டும்? பிராமணர் போலுடுத்துப் பிராமணர்போற் பேசிப் பிராமணராக வாழும் தமிழரும் உண்டே! நயன்மைக் கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில், அலுவற் பேற்றின் பொருட்டுப் பூணூல் களைந்து தம்மைத் தமிழராகக் காட்டிக் கொண்ட பிராமணரும் உண்டே!