மத
மதிப்புறவுபற்றித் தும் என்னும்
பன்மைப் பெயரை இந்தியும், யூ என்னும் பன்மைப் பெயரை ஆங்கிலமும், ஒருமைக்கு வழங்குவது போல்,
வேத ஆரியமும். தும் என்னும் பன்மைப் பெயரைத் த்வம் என்று திரித்து ஒருமைக்கும், யுவாம் யூயம்
என்னும் யகரவடிப் பெயர்களை முறையே இருமை பன்மைக்கும் வழங்கிற்றுப் போலும்.
ஆகவே, நூம் என்னும் முன்னிலைப்
பன்மைப் பெயரின் திரிபே, இந்திய ஆரியத்திலுள்ள த்வம் என்னும் முன்னிலை யொருமைப் பெயர்
என்று கொள்ளப்படும்.
அஸ் என்னும் சொல் வரலாற்றைக்
கைலாஸ என்னும் சொல் வரலாற்றிற் காண்க. (ப. 67).
சமற்கிருத முன்னிலை யொருமை நிகழ்கால
வினையீறு 'ஸி'. அஸ் என்னும் வினை இதனொடு புணரும்போது ஈறு கெட்டு அஸீ என நிற்கும். ஆகவே, தத்,
த்வம், அஸி என்னும் முச் சொல்லும் சேர்ந்து, நீ அதுவா யிருக்கின்றாய் என்று பொருள்படும் 'தத்த்வமஸி'
என்னும் கூற்றியம் அமையும்.
தத் என்னும் சுட்டுப்பெயரினின்றே
தத்வ (தத்துவம்) என்னும் சொல்லும் பிறக்கும்.
தத்வ = அதாயிருக்கும் தன்மை, உண்மையான
தன்மை, உண்மை, மெய்ப்பொருள்.
வடசொல் என்பதற்கும் சமற்கிருதச்
சொல் என்பதற்கும் ஒரு வேற்றுமை யுண்டு. தொன்றுதொட்டு வடநாட்டில் தனிச் சிறப்பாக வழங்குஞ்
சொல்லெல்லாம் வடசொல்லே. சமற்கிருதச் சொல் என்பது, வேத ஆரியர் வந்தபின் புதிதாக அமைக்கப்பட்ட
ஆரியச் சொல். ஆரியர் வரு முன்பே, வடதிரவிடர் (பிராகிதர்) பல புதுச் சொற்களைப் புனைந்திருந்தனர்.
அவையும் வடசொல். ஆகவே, வடசொல் என்னும் பெயர், ஆரிய மல்லாத வடநாட்டுச் சிறப்புச்
சொற்கும், சமற்கிருதச் சொற்கும் பொதுவாம். எல்லாச் சமற்கிருதச் சொல்லும் வடசொல்லாகும்;
ஆயின், எல்லா வடசொல்லும் சமற்கிருதமாகா.
ஆதி என்னும் சொல் வடசொல்லே;
சமற்கிருதமன்று. இக் கருத்தில்தான் அது என் 'திருக்குறள் தமிழ் மரபுரை'யில் வட சொல்லென்று
குறிக்கப்பட்டுள்ளது. அது கழக இலக்கிய வழக்கில் இல்லை. ஆயினும், உண்டாதல் என்னும்
பொருள்கொண்ட ஆதல் வினையியின்று அதைத் திரிப்பர் தமிழன்பர் சிலர்.
ஆக்குதல் = படைத்தல். "அனைத்துலகும்
ஆக்குவாய் காப் பாய் அழிப்பாய்" (திருவாச. 1 : 42). இவ் வாட்சி அவர்க்குத் துணை செய்யலாம்.
|