New Page 1
கட்குத் தலைவியாகிய காளியே
அதற்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது,
கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும், தெளிய
அறிக.
பேய்நிறங் கருப்பாதலால், கருப்பு
என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம்
பற்றியே அப் பெயர் பெற்றாள். அதனால் நீலியென்றும் அவட்குப் பெயர். கள் - காள் - காளம்
- காளி = கருப்பி. நீலம் (கருப்பு) - நீலி. கருப்பி என்றும் நீலி என்றும் பெண்டிர்க்கு இடும்
பெயரெல்லாம் காளி பெயரே. காளி பாலை யாகிய காட்டிற்குத் தெய்வமானதனால், காடு கிழவோள்(-
காடு கிழாள் - காடுகாள்) என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங்
கருத்துப்பற்றி, கன்னி குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய்போன்றவள்
என்று கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை
என்னும் பெயர்கள் அக் கருத்துக் கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும் போருக்குத் தலைவி என்பதுபற்றி,
அமரி சமரி என்றும், சூலத்தைப் படையாகக் கொண்டமையாற் சூலி யென்றும்,
காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர் வெற்றியும் அவளால் தரப்படுவதென்று கருதி, அவளைக்
கொற்றவை என்றனர். கொற்றம் - வெற்றி. அம்மை - அவ்வை = தாய். கொற்றம் + அவ்வை
= கொற்றவ்வை - கொற்றவை.
காளி மாபெரு மறத்தியாதலால்,
அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங் கலைமானும் ஊர்தியாயின. அவள் மறத் தினாலேயே, அம்மை
யென்னும் பெயர் அம்மன் எனத் திரிந்தது.
பாலைவாணரான எயினரும் வேட்டுவரும்
மறவரும், தமக்கு நில விளைச்சலின்மையால், ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியரு
ளென்று நம்பினர்.
பாலைநிலத்திற்குரிய வேனிற் காலத்திற்
காணுங் கொப்புள நோய், அம்மையாகிய காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு 'அம்மை'
நோய் என்றே பெயரிட்டனர்.
அம்மைநோய் மக்களெல்லார்க்கும்
பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம் நாளடைவில் நானிலத்திற்கும் பொது வாயிற்று; ஊர்தொறும்
காளிகோயில் தோன்றிற்று.
மூவேந்தரும் போர் வெற்றியை
விரும்பினதினாலும், பாலை வாணர் படையாகிய காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந்தத
|