பக்கம் எண் :

36தமிழர் மதம்

New Page 1

    2. குவிதல், குவிந்த அரும்பு அல்லது மொட்டு. "அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல்." (இறை. 22, உரை). ஒ.நோ: கும் - கும்பு -கூம்பு.  கும் - குமி - குவி.

    3.  அரும்பு போன்ற சிலருரை பழி. "அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின்" (தொல். கள. 48). "அம்பலும் அலரும் களவு." (இறை. 22).

    ம. அம்பலம், க. அம்பல, து. அம்பில, வ. அம்பர.

    வடசொல்லில் லகரம் ரகரமாகத் திரிந்திருத்தல் காண்க. அத் திரிசொல்லையே அம்பலம் என்னும் இயற்சொல்லிற்கு மூல மாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் காட்டியிருப்பது, இற்றைத் தமிழரின் இழிவான அடிமைத்தனத்தையே காட்டும்.

சிவ வழிபாட்டு வடிவம்

    சிவனுடைய ஐவகை வடிவுகளுள்ளும், பொதுமக்கள் வழி பாட்டிற் கேற்றது அம்மையப்ப வடிவமே.

சிவ வழிபாட்டு முறை

    காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்த வுள்ளத்துடன் அக்கமாலை யணிந்து திருநீறு பூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும்போதெல்லாம் தேங்காயுடைத்து வாழைப் பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கைகுவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுந் திருவைந் தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப் பட்டது.

    உழவரும் உழைப்பாளிகளும் தொழிலாளரும் காலையில் சிவ வணக்கம் மட்டும் செய்ய முடியும். திருநாள்களிலும் திருவிழாக் காலத்திலும் எல்லாரும் கோவில் வழிபாடு செய்வர்.

    அஃகு - அக்கு = கூர் அல்லது முள்ளுள்ள காய்மணி. அக்கு -அக்கம். முள்ளுண்மையால், அக்கத்திற்குக் கண்மணி முண்மணி யென்றும் பெயர்.  கள் = முள். கள்ளி = முள்ளி, முட்செடி. கள் + மணி = கண்மணி. முதற்காலத்திற் பனிமலையும் பாண்டியன் ஆட்சிக்குட்பட்டிருந்ததனால், ஆரியர் வருமுன்னரே, தென்னாட்டுச் சிவநெறியாரும் வடநாட்டு நேபாள அக்கமணியைத் தொன்று தொட்டு அணிந்து வந்தனர்.

     "வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு  
      தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"

(11 : 21-2)