பக்கம் எண் :

28



    இனி,பிராமணர் திருமணத்தில், மணமகள் ஒரு கல்லை மிதிக்கும் போது, மணமகன் "ஓ பெண்ணே!இக் கல்லை மிதி. இதைப்போல் உறுதியாயிரு. உனக்குத் தீங்கு செய்ய நாடுவாரை அழித்துவிடு.உன் பகைவரை வெல்" என்று மணமகளை நோக்கிக் கூறுவதும், இங்குக் கவனிக்கத்தக்கது.

    அருந்ததிகாட்டல் என்பதும் ஆரியத் தொடர்பு கருதியதே. தமிழ மரபுப்படி அருந்ததி தலையாயகற்பரசியல்லள். அவள் தன் கணவனாகிய வசிட்டமுனிவன் ஒழுக்கத்தைப்பற்றி ஐயுற்று, அவனால்விண்மீனாகச் சாவிக்கப்பட்டாள் என்று கதை கூறுகின்றது. தமிழப் பத்தினிப் பெண்டிரோ,'கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை', என்னுங் கொள்கையினர். ஆதலால், ஆதிமந்தியார்,பூதப்பாண்டியன் தேவியார், கண்ணகியார், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தேவியார்,திலகவதியார் முதலிய எத்துணையோ தலையாய தமிழகக் கற்புத் தெய்வங்களிருக்கவும், அவரைவிட்டுவிட்டு அருந்ததியை நினைப் பித்தல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்றே.

6)கரணம் விளங்காமை

    மக்கள்ஆறறிவுடையார். அதனால் எதைச் செய்யினும் அறி வோடு செய்தற்குரியர். ஒருவர் வாழ்க்கையில்தலைசிறந்த நிகழ்ச்சி யாயும், இருவர் இன்ப வாழ்விற்கு அடிகோலுவதாயும், பலர் மகிழ்ச்சியுறுதற்குரிய காட்சியாயும், நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கூடுவதாயும், உள்ள திருமணச்சடங்கைப்புரோகிதனுக்கன்றிப் பொருளொடு ஓதுகின் றானா பொருளில்லாது உளறுகின்றானா என்பதையும் அறியவியலாத நிலையில், இவ் விருபதாம் நூற்றாண்டிலும், குருட்டுத்தனமாக நடத்தி வருவது,நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் முற்றும் முரணானதாம்.

2. குலக்கட்டுப்பாட்டு மிகை

    தொழில்பற்றியகுலப்பாகுபாடு தொன்றுதொட்டுத் தமிழகத்தில் இருந்துவந்ததேனும், தமிழ இனம் ஒற்றுமை குலைந்து சின்னபின்ன மாய்ச் சிதைதற்கும், அயலார்எளிதாய்ப் படையெடுத்துவந்து கைப்பற்று தற்கும், வழிவகுத்தது, பிற்காலத்தில் பிறப்பொடுதொடர்புபடுத்தப்பட்ட வருணாசிரம தருமம் என்னும் ஆரியமுறைக் குலப்பிரிவினையால் விளைந்தகுலவெறியே. இதனாலேயே, 'குரங்கானாலும் குலத்திலே கொள்'. 'பழங்காலைத் தூர்க்காதே, புதுக்காலைவெட்டாதே' எனப் பல தீய கொள்கைகள் பிறந்தன. 'திரை கடலோடியுந் திருமிகத் தேடு' என்னும்தாளாண்மை மிக்க நாட்டில், கடல் தாண்டக்கூடாதென்றும், ஆறு தாண்டக்கூடாதென்றும்,கட்டுப்பாடுகள் எழுந்தன.

    ஒரேகுலத்திற்குள் திரும்பத்திரும்ப மணஞ் செய்து வந்ததினால் அறிவாற்றல் மிக்க பிள்ளைகள்அருகிப் பிறந்தன.

    அண்டாமை,தீண்டாமை, காணாமை முதலிய கூட்டரவுக் கொடுமைகளெல்லாம், இவ் இடைக்காலத்தில்தான்தலைவிரித்துத் தாண்டவமாடின.