பக்கம் எண் :

97


ஆத்திரேலியா, நார்வே முதலிய நாடுகளுக்கு ஆட்டுப்பண்ணையே உயிர் நாடி. தமிழரும் இதை மேற்கொள்ளின் மிகுந்த நலமுண்டாகும்.

6. ஆரியம்

    தமிழன் கெட்ட வழிகளில் மிகக் கொடியது ஆரியமே. ஆரியரைப் போலக் குலப்பற்றுள்ள வகுப்பார் வேறெவரும் இல்லை யென்றே கூறலாம்; ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்ததைப்பற்றியும், தமிழர் அவரை வளம் படுத்தியதைப் பற்றியும் யாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், ஆரியர் தம்மைத் தாங்கிய தமிழரையே கெடுக்கின்ற நன்றிக் கேடு பொறுக்குந்தரத்ததன்று.

    ஆரியத்தால் தமிழர்க்கு விளைந்த தீங்குகளை இரு வழியாகப் பிரிக்கலாம்:

(1) குலப்பிரிவினை

    மேனாட்டாரைப்போல ஒரே சமூகமாய் உறவாடிக்கொண்டிருந்த தமிழரைப் பற்பல உறவு கலவாத தனிக் குலங்களாகப் பகுத்து, அவற்றுக்கு உயர்வு தாழ்வும் பிறப்பாற் சிறப்பும் கற்பித்து, அவையெல்லாம் தமக்குத் தொண்டு செய்யும்படி தம்மைத் தலையாகச் செய்து கொண்டனர் ஆரியர். அவர் வருமுன் தமிழர்க்குள் இருந்த குலப்பகுப்பு ஒழுக்கமும் தொழிலும்பற்றியதே யன்றிப் பிறப்புப்பற்றிய தன்று.

"ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"
(குறள். 133)
 
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
(குறள். 972)

என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரே, ஆரியர் வகுத்த குலப் பகுப்பைக் கண்டித்திருக்கின்றார்.

    ஆட்சியதிகாரம் அக்காலத்தில் அரசரிடமிருந்தது; அதனால், ஆரியர் முதலாவது அரசரையே அடுத்தனர். இக்காலத்தில் குடிகளிடமிருப்பதால் இன்று அவர்களை அடுக்கின்றனர். அரசனிடம் அதிகாரமி ருந்த அக்காலத்தில், ஆரியர் பல வலக்காரங்களால் அரசரை வசப்படுத்தினதனால், குடிகள் ஆரியத்தீங்கைத் தடுக்க முடியவில்லை. ஆயினும் ஆரிய அன்முறையை (அநியாயத்தை)ப் பொறாத சில புலவரும் துறவிகளும் ஆரியத்தைக் கண்டித்தே வந்தனர். சித்தரின் பார்ப்பனியக் கண்டனத்தைப் பதினெண்சித்தர் ஞானக்கோவையிற் பரக்கக் காண்க.

    தமிழர் மதிநுட்ப முள்ளவரானாலும் பழைமையான குலத்தைச் சேர்ந்தவராதலாலும், பிறர்க்குத் தீங்கு கருதாதவராதலாலும், தம்மைப் போலப் பிறரை எண்ணி அயலாரையெல்லாம் நம்பி வேளாண்மை செய்யும் தன்மை