எதிர்காலத்தோடு அதற்கு
நெருங்கிய தொடர்புள்ளமையானும், செய்யும் என்னும்
எதிர்கால வினைமுற்றே நிகழ் காலத்தையும் முதலில்
உணர்த்தி வந்தது.
பின்பு, கில் என்னும் ஆற்றல்
வினையின் இறந்தகால வினை யெச்சமாகிய கின்று
என்பது, வினைமுதனிலையொடு கூடி ஐம்பால் மூவிடப்
பொதுவான நிகழ்கால வினைமுற்றா யமைந்தது.
எ-டு:
"ஒருதனி வைகிற் புலம்பா
கின்றே." (குறுந்.
166)
கிற்றல்=ஆற்றுதல், செய்யமாட்டுதல்.
செய்யகிற்பேன்= செய்யமாட்டுவேன், என்னால்
செய்யமுடியும். முதலாம் புறப்பாட் டில் வரும் ஆகின்று
என்பது, கின்று என்னும் ஈறு கொண்டதன்று, ஆயிற்று
என்று இறந்தகாலப் பொருள் தரும் "ஆயின்று"
என்னும் வாய்பாட்டது. ஆயினது-ஆயின்று-ஆயிற்று.
ஆகியது-ஆகினது-ஆகின்று.
செய்கின்று என்னும் இடைக்கால
நிகழ்கால வினை முற்று, பின்பு, பாலீறுபெற்றுச்
செய்கின்றான் என்றாயிற்று.
செய்கின்று என்னும் நிகழ்கால
வினைமுற்று செய்யுன்னு என மருவிற்று. செய்கின்றான்
என்னும் வினையாலணையும் பெயரும்,
செய்யுன்னான்-செய்யுனன்-செய்நன் என்றும்,
செய்குன்னான்-செய்குனன்-செய்குநன் என்றும்
மருவும். அறிநன்-(அறிஞன்) என்பதும் இத் திரிபே.
செய்கின்றான் என்பது செய்கிறான்
எனத் தொக்கபின், கிறு என்னும் வடிவும் நிகழ்கால
இடைநிலையாகக் கொள்ளப் பட்டது.
36ஆம் புறப்பாட்டில், அடுநை, விடுநை
என்பவை நிகழ்காலச் சொல்லேயாயினும்,
நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்குமுள்ள
தொடர்புபற்றியும், எதிர்கால வினையை
நிகழ்காலச் சொல்லாற் குறிக்கும் வழக்குப்
பற்றியும், அவற்றிற்கு எதிர்காலப் பொருள் கூறப்
பட்டது. நாளை வருகிறேன், அடுத்த ஆண்டு தருகிறேன்
என்னும் வழக்கை நோக்குக.
அடுகின்றை-அடுகுன்னை-(அடுன்னை)-அடுநை.
ஆநின்று என்பது உண்மையான நிகழ்கால
இடைநிலை யன்று. அது செய்துநின்றான் என்று
பொருள்படும் செய்யா நின்றான் என்னும்
வினையெச்சத் தொடருக்கு நிகழ்கால வினை முற்றுப்
பொருள் கற்பித்து, அதன் இடைப்பகுதியைப்
பிரித்துக் கொண்ட உரையாசிரியர் படைப்பே.
அதைத் தழுவியே, நன்னூ லாரும் நிகழ்கால
விடைநிலைகளுள் ஒன்றாக அதனைச் சேர்த்துக்
கொண்டார்.
|