1. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை
(1)
சென்னை
மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு,
மொழியியற் கலைநாகரிகத் தன்னாட்சி
(Linguistic
and Cultural Autonomy)
அமைத்தல்.
(2) தனித்தமிழ்ப்
பற்றும் தமிழிலக்கிய வறிவும் உள்ள ஆசிரியரையே
கல்வியமைச்சராக அமர்த்துதல்.
(3) தனித்தமிழ்ப்
பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வு பெற்றுள்ள,
கல்வித்துறை யியக்குநர், பெருங்கல்லூரி
முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே,
தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக்
கண்காணகராக (Vice-Chancellors)
அமர்த்துதல்.
(4) இருவகை வழக்குத்
தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும் வண்ணனை
மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே
கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித்
தாக்குதலினின்று தமிழைக் காப்பவரும்,
உண்மையையுரைக்கும் திண்மையுள்ள வருமான தமிழ்ப்
பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய
முப்பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறைத்
தலைவராக அமர்த்துதல்.
(5) தமிழுக்கு மாறாக
வேலைசெய்யும் தமிழாசிரியர், தலைமை
யாசிரியர், முதல்வர், துணைக் கண்காணகர்
ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல்.
(6) இந்தியால் தமிழ்
கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய
இருமொழித் திட்டத்தையே கல்வி, ஆள்வினை (Administration),
வழக்குத்தீர்ப்பு ஆகிய முத்துறையி லும் எல்லா
மட்டத்திலும் கையாளுதல்.
(7) தமிழ்ப்பற்றற்ற
பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான்மாரைத்
துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக்
கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி
அகரமுதலியை உடனே திருத்துதல்.
(8) தமிழ்நாட்டு உண்மை
வரலாற்றை எழுதுவித்துப் பாடமாக்கலும்,
தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய்
வரலாற்றைப் புறக்கணித்தலும்.
(9) செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலியை முழுநிறை வாக
உருவாக்குதல்.
|