பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்63

2. பெண்பாற் பகுதி

(1) பகலாட்டு

1. தட்டாங்கல்

     பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை பலருமான மகளிர் சிறு கற்களைக் கையால் தட்டிப்பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல். இது பண்டைக் காலத்தில் கழங்கு கொண்டு ஆடப்பட்டதினால், கழங்கு என வழங்கியதாகத் தெரிகின்றது. கழங்காவது கழற்காய் அல்லது கழற்சிக்காய். கழற்சிக்காய் என்பது இன்று கெச்சக்காய் என மருவி வழங்குகின்றது.
      "செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
       பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்" (புறம். 36)
      "மகளிர்.... முத்தவார்மணற்
       பொற்கழங் காடும்." (பெரும்பாண். 327 - 35)
     தட்டாங்கல் கீழ்வருமாறு பலவகைப்படும். அவையனைத்தும் வீட்டுள்ளும் வீட்டுமுற்றத்திலும் விளையாடப் பெறும்.

I. மூன்றாங்கல்

     ஆட்டின் பெயர் : மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டு மூன்றாங்கல்.
     ஆடுமுறை : மூன்று கற்களுள் ஒன்றைக் கீழ்வைத்து ஏனையிரண்டையும் கையில் வைத்துக்கொண்டு, அவற்றுள் ஒன்றை மேலெறிந்து இன்னொன்றைக் கீழ்வைத்து முந்திக் கீழ்வைத்ததை எடுத்துக்கொண்டு, மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். பின்பு மீண்டும் ஒன்றை மேலெறிந்து, கையிலுள்