பக்கம் எண் :

92தமிழ்நாட்டு விளையாட்டுகள்

     இங்ஙனம் இருவரும் மாறி மாறி ஆடிவரும்போது, எடுத்துக் கொள்ளப்படாது எஞ்சியுள்ள கற்களெல்லாம் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்துவிடின், ஆட்டம் நின்றுவிடும். இருவரும் தாந்தாம் எடுத்துவைத்திருக்கும் கற்களை எண்ணுவர். கடைசியில் ஒரே வரிசையிற் போய்ச் சேர்ந்த கற்களெல்லாம், அவ் வரிசையாரைச் சேரும். மிகுதியான கற்களை எடுத்தவர் வென்றவராவர்.
     சிலவிடங்களில், ஒரே ஆட்டையில் வெற்றியைத் தீர்மானியாமல், ஐந்தாட்டையின் பின் அல்லது பத்தாட்டையின் பின் தீர்மானிப்பர். அம்முறைப்படி ஆடும்போது, முன் ஆட்டைகளில் தோற்றவர் வென்றவரிடம் தமக்கு வேண்டிய கற்களைக் கடன் வாங்கிக் கொள்வர். வென்றவர் கடன் கொடாவிடின், இருக்கின்ற கற்களை அவ்வைந்தாகக் குழிகளில் போட்டுவிட்டு, கல் இல்லாத அல்லது ஐந்து கல் இல்லாத குழிகளை வெறுமையாக விட்டுவிடவேண்டும். அவ் வெறும் குழிகட்குப் 'பவ்வீக் குழிகள்' என்று பெயர். அவற்றில் ஒவ்வொரு குச்சு இடப்படும். ஒருவரும் அவற்றில் ஆடல் கூடாது.
     தோற்றவர்க்கு ஒருகுழியும் நிரம்பாதபோது (அதாவது ஐந்து கற்கும் குறைவாக இருக்கும்போது) இருக்கின்ற கற்களை ஒவ்வொன்றாகக் குழிகளிற் போட்டுவிட்டு, கல் இல்லாத குழிகளைப் பவ்வீக் குழிகளாக விட்டுவிடல் வேண்டும். அன்று எதிரியாரும் தம் வரிசையிலுள்ள எல்லாக் குழிகட்கும் ஒவ்வொரு கல்லே போடவேண்டும். இங்ஙனம் ஒவ்வொரு கல்லே போட்டு ஆடும் முறைக்குக் 'கஞ்சி காய்ச்சுதல்' என்று பெயர். அவ்வைந்து கல் போட்டு ஆடித் தோற்றவர், கஞ்சிகாய்ச்சி ஆடும்போது வெல்ல இடமுண்டு. ஒரு முறை வென்றவர் மறுமுறை முந்தியாடல் வேண்டும்.
     ஓர் ஆட்டை முடிந்தபின், வெற்றியும் தோல்வியுமின்றி இருவரும் சமமாகக் கற்கள் வைத்திருப்பின், அடுத்த ஆட்டையில் 'சரிபாண்டி' ஆடல் வேண்டும். முதலாவது அவ்வைந்தாகவும் பின்பு பப்பத்தாகவும் கற்களையெடுத்து, அத்தனையே போட்டு ஆடுவது, சரிபாண்டியாடலாகும். இதில் விரைந்து விளைவு காணலாம்.