(குயில்; குரல் 1; இசை-8; 22.7.58)
குயில் இரண்டாம் முறையாகத் துவக்கப்பட்டது.எதிர்பார்த்ததை விட ஆதரவு பெருகி வருக்கின்றது. இப்பெருக்கம் தமிழர்களிடையே வலுத்து வரும் தமிழ்ப்பற்றைக் காட்டுகின்றது. இந்நிலைக்குக் காரணம் பெரியார் இயக்கம் ஒன்றே என்பதை நாம் மறந்தால் வாழ்வே நம்மை மறக்கும். குயிலுக்கு உடன் ஒத்துழைத்தல் கடன் தமிழர்கட்கு! குயிலுக்கு - குயிலின் மேன்மைக்கு - குயிலின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் ஒத்துழைப் பதாகும். இம்முத்தமிழ் நாட்டின் விடுதலைக்கு ஒத்துழைப்பதாகும். இனி குயிலுக்கு ஒத்துழைக்கும் புலவருக்கும் எழுத்தாளருக்கும் எமது அன்பு வேண்டுகோள் சற்று நினைவு கூர்ந்து, தனித்தமிழிலேயே கட்டுரை, பாட்டு எழுதியுதவக் கூடிய மட்டும்! சாதி ஒழிக - தமிழ்நாடு மீள்க! என்னும் உயிர் மருந்தே கொள்கை யாகக் கொண்டு தமிழர் மானங்காக்கும் பெரியார் இயக்கத்தில் தி. க. இயக்கத்தில் உண்மைப் பற்றுடையவர்கள் மட்டும் குயிலை - எழுத்தால் - பிறவகையால் ஆதரித்தால் போதும். அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவாரும் எழுதலாம். எழுத்துக்கள் வரவேற்கப்படும். நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ நூறு புலவர்கள் பாவாணர்கள் பாட்டு எழுதி அனுப்புகிறார்கள். தமிழ் வாழ்க! தமிழ்நாடு வெல்க! ஆயினும் அவை அனைத்தையும் குயிலில் உடனுக்குடன் வெளியிட எப்படிமுடியும்?இயலும் அளவு வெளியிடுவோம். இயலும்போது வெளியிடுவோம் பொறுத்தருள்க.
|