பக்கம் எண் :

கன்னடம்55

திரவிடத்தாய்

2
கன்னடம்
 
கன்னடம் என்னும் பெயர்
 
மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்துப் பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள் கருநாடு, கருநாடகம் என்பன. கன்னட நாட்டார் கருநாடர் என்றும், கருநடர் என்றும் அழைக்கப்பட்டார்.
 
கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இருபொருள்கள் கூறப்படுகின்றன. அவை (1) கரிய நாடு, (2) கருங்கூத்து என்பன.
 
கன்னட நாட்டிற் பெரும்பகுதி கரிசல் நிலமாயிருப்பதால், கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும் (Dr. Gundert) கால்டுவெல் கண்காணியாரும்.
 
கூத்துகளில் இழிந்த வகைக்குக் கருங்கூத்து என்று பெயர்.
 
 
 
"முதுபார்ப்பான் வீழ்க்கைப் பெருங்கருங் கூத்து"
(கலித். 65 : 29)
 
 
 
நடம் = கூத்து. நடன் = கூத்தன்.
 
 
 
"வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி மேவர நுடங்க"
(பரிபா. 22 : 42)
 
 
 
நடர் = கூத்தர்.
 
 
 
"விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட"
(குறள். பரிமே. உரை)
 
 
 
நாடகம் = கதை தழுவிவரும் கூத்து. மிகப் பழைமையான அநாகரிக அல்லது கண்மூடிப் பழக்கத்தைப் 'பழைய கருநாடகம்' என்பர்; இங்குக் 'கருநாடகம்' என்பது பழைமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாயிருக்கலாம்.