பக்கம் எண் :

4திரவிடத்தாய்

திரவிடத்தாய்

தமிழ் என்னுஞ் சொல் முதலாவது தமிழரைக் குறித்திருப்பது அவரின் தனிப்பட்ட நாகரிகம்பற்றி. பண்டைக் காலத்தில் நாவலந்தேயத்தில் (இந்தியாவில்) மட்டுமல்ல, உலக முழுவதி லுமே தமிழர் தலைசிறந்த நாகரிகராயிருந்ததினால் தனிப்பட்டவர் என்னும் பொருளில் தமிழர் எனப்பட்டனர். பழந்தமிழரின் நாகரிகத்தை, அவருடைய பழக்கவழக்கம், சிறந்த கருத்துகள், செய்யுள்வன்மை, அவர் செய்திருந்த பொறிகள், தமிழின் அமைதி, முத்தமிழ்ப் புணர்ப்பு, தமிழ்க்கலை நூல்கள் முதலியவற்றால் அறியலாம். அவரது சிறந்த ஒழுக்கத்தினாலேயே,
 
 
 
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து"
 
 
 
எனப் பண்டைத் தமிழகத்தைப் பாராட்டிக் கூறினர் பனம் பாரனாரும்.
 
 
 
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனேக
(புறம். 187)
 
 
 
என்றார் ஒளவையாரும்.
 
ஒரு குலத்தாரின் அல்லது நாட்டாரின் பெயர் திரிந்தும் திரியாதும் அவரது மொழியைக் குறிப்பது இயல்பே. ஆங்கிலரது (Angles) மொழி ஆங்கிலம் (English) என்றும், செருமனியரது (Germans) மொழி செருமனியம் (German) என்றும் கூறப்படுதல் காண்க.
 
தமிழ் என்னும் சொல் தனிமை என்று பொருள்படும் போது, அதன் ழகரம், அமிழ் இமிழ் உமிழ் குமிழ் என்பவற்றிற்போல ஒரு விகுதியாம்.
 
தமிழ் இனிமையா யிருத்தலின், தமிழ் என்னுஞ் சொல்லுக்கு இனிமைப் பொருள் கூறுவர். இது வழிப்பொருளேயன்றி வேர்ப்பொருளன்று.
 
4. குமரி நாடே (Lemuria) தமிழ் (திரவிடம்) தோன்றிய இடம்
 
உலகில் இதுபோது திரவிடமிருப்பது இந்தியாவே; இந்தியாவிலும் திரவிடத்திற்குச் சிறந்தது தென்னாடே; தென்