(1434)
என்னும்
தொல்காப்பியர் கூற்றும்,
"ஏரணம் உருவம்
யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்,
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள"
என்னும்
பழந்தனிப்பாடலும், பண்டைத் தமிழில் மறைநூலும் பல்கலை இலக்கியமும் இருந்து பின்னர்
இறந்துபட்டமையை உணர்த்தும். பண்டைத் தமிழிலக்கியம் இறந்துபட்டமையினாலேயே, அதன்
மொழிபெயர்ப்பான சமற்கிருத இலக்கியம் இன்று முதல் தோன்றிய மூலமாகக் காட்சியளிக்கிறது.
(7) ஆரிய
வேதத்தையும் அதன் வழிப்பட்ட சமற்கிருத நூல் களையும் தமிழரான சூத்திரர் ஓதின், அவர் நாவை
அறுத்துவிட வேண்டு மென்றும், அவற்றைக் கேட்பின் அவர் காதில் உருக்கின ஈயத்தை வார்த்தல்
வேண்டுமென்றும், ஆரிய அறநூல்கள் அறைகின்றன. தமிழையும் தமிழ் நூல்களைக் கற்றற்கும்
கேட்டற்குமோ எத்தகைய குலமத கட்சியின விலக்கும் வேறுபாடுமில்லை.
"செய்யா
மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே - செய்யா
அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்"
என்று
வெள்ளிவீதியாரும் பாடியிருத்தல் காண்க.
(8) ஆரிய
அறநூல்கள் யாவும் கடுகளவும் நடுநிலையறியாதவை யென்பது, அவை குலத்திற்கொரு முறையும் தண்டமும்
கூறுவதினின்று தெளிவாய் அறியப்படும்.
"வள்ளுவர்செய்
திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்திற் கொருநீதி"
என்னும்
சுந்தரம்பிள்ளை வாயுரை ஈண்டுக் கவனிக்கத்தக்கது.
இங்ஙனம் தமிழ்
பல்லாற்றானும் தலைசிறந்த மொழியாயும், சிவநெறியும் திருமால்நெறியும் தூயதமிழ் மதங்களாயும்,
இருப்பவும், தமிழ் பொதுவழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப்பட்டபின்னும், தமிழர்
ஆரியரினும் தாழ்ந்தவரென்று கொள்ளப்பட்டபின்னும், தமிழும் தமிழிலக்கியமும் இழப்பிற்கும்
அழிப்பிற்கும் இடனாய், இற்றைச் சிறுமையடைந்துள்ளன. அறிவும் ஆராய்ச்சியும் மிக்க
இக்காலத்திலேனும், தமிழர் விழித்தெழுந்து தம் முன்னோர் நிலைமையடைய முயல்வாராக.
- "தென்மொழி"
செப்டம்பர் 1959