உலகில்
தமிழை நிலைநாட்டிய உடன்பிறந்தார் இருவர்
திருவள்ளுவர் முதல் மறைமலையடிகள் வரை
பெரும்புலவர் எத்துணையர் தோன்றியிருப்பினும்,
அவரெல்லா ரறிவாற்றலையும் தொகுத்து ஓரகத்தே
தேக்கி, எண்ணற்றவர் வந்துண்ணினும் வற்றா
வாரி போன்றும், எடுக்க எடுக்கக் குறையா உலவாக்கோட்டை
போன்றும், நாடெங்கும் வறளினும் கேடறியா
மூலபண்டாரம் போன்றும், புலவ ரெல்லாருங் கூடும்
பொதுமண்டபம் போன்றும் அறிஞர் கண்டுகளிக்கும்
அரும்பொருட் காட்சியகம் போன்றும், ஆராய்ச்சியாளர்க்
கெல்லாம் ஐயமுதம் (பஞ்சாமிர்தம்)
அளிக்கும் ஆவினன்குடி போன்றும், குன்றாது உணவு
பெருக்குங் கூட்டுப்பண்ணை போன்றும், பகைவரெல்லாங்
கூடி முற்றுகையிடினும் புறங்காட்டுவிக்கும் படைக்கலக்
கொட்டில் போன்றும், தமிழுக்கு ஊறு நேர்வதைத்
தடுத்துத் தமிழ்மொழியிலக்கிய நாகரிகப்
பண்பாட்டைக் காக்கும் தனிக்காவற்கூடம்
போன்றும், விளங்கும் ஒரு நூலகத்தொடு கூடிய தமிழ்நூல்
வெளியீட்டு மட்டிட்ட கூட்டுப் பங்குக் கழகத்தை
1920ஆம் ஆண்டில் தோற்றுவித்து வளர்த்து வருபவர்,
நெல்லைத்திருவரங்கம்
பிள்ளையும்
அவர்க்குப் பின் அவரிளவலான தாமரைத் திரு செந்தமிழ்ச்
செல்வர்வ.சுப்பையாப்
பிள்ளையுமே.
திருவரங்கம் பிள்ளை
பண்பு
அமர்ந்த தமிழ நோக்கும் அமைந்த இன்சொல்லும்
இயல்பாகக் கொண்டு, தமிழார்வமே வடிவாகத் திரண்டவர்
திருவரங்கம் பிள்ளை. அவரது தமிழார்வமாகிய
காந்தமே, அவரை மறைமலையடிகளொடும் அவரின்
மூத்த மகளார் தனித்தமிழ்த் திருவாட்டி நீலாம்பிகையம்மை
யாரொடும், ஒருங்கே இறுகப் பிணித்திணைத்தது.
அதனால், திருணத் திற்கு முன்பே இலங்கையிற்
பன்முறை பணந்தண்டி அடிகட்கனுப்பி, அவர்களது
தனித்தமிழ் நூல் வெளியீட்டிற் குதவினார்.
திரு. வ. சுப்பையாப்
பிள்ளை பண்பு
திரு. வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள், பொது
அன்பில் தமையனாரிற் சற்றுக் குன்றியவரேனும்,
தமிழார்வத்தில் இம்மியுங் குன்றியவரல்லர்;
நூல் வெளியீட்டுத் திறனிலும் வணிகத் திறனிலுமோ
தமையனாரிலும் பன்மடங்கு விஞ்சியவரே. "மூத்தது
மோழை"
என்பது தமையனார்க்குச் சற்றும் பொருந்தாவிடினும்,
"இளையது
காளை"
என்பது தம்பியார்க்கு முற்றும் பொருந்தும்.
சிவக்கொண்முடிபு (சைவ சித்தாந்த) நூற்பதிப்புக்
கழகமும் மறைமலையடிகள் நூல்நிலையமும், இன்றுள்ள
விரிவும் பெருமையும் பெற்றிருப்பதற்குத் திரு.
சுப்பையாப் பிள்ளையின் அகப்புறக்
கரணவுழைப்பே முற்றுங் காரணம். |