பக்கம் எண் :

தமிழ் வரலாற்று, தமிழ்க்கழக அமைப்புமாநாட்டுத் தலைமையுரை37

அவர் வகுத்த இலக்கணவிதியை எடுத்துக்கொண்டால் இந்த உண்மை புலப்படும். ஒன்பது+பத்து=தொண்ணூறு, ஒன்பது+நூறு=தொள்ளாயிரம் என்று புணர்த்துக் காட்டுகிறார். அவர் காலத்தில் தொண்டு என்னும் சொல்லே ஒன்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஒன்று முதல் எட்டு வரையுள்ள எண்ணுப்பெயர்கள் குற்றியலுகர ஈறு பெற்றிருந்தது போலவே, தொண்டு எனக் குற்றியலுகர இறுதி கொண்ட சொல்லே அக்காலத்து வழங்கப்பட்டது. எப்படி இதை அறிகிறோம்? "தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று" எனத் தொல்காப்பியத்திலேயே (செய்யுளியலில்) வருகிறது. அதுவுமல்லாமல், "தொண்டுபடு திவவிண் முண்டக நல்யாழ்" என இசை நூல்களிலும் இச்சொல் பயின்று வருகிறது.

தொண்டு என்பது தொளை என்பதன் அடியாகப் பிறந்தது. (இவ் விரண்டிற்கும் வேர்ச்சொல் தொள் என்பது) உடம்பில் உள்ள (9) தொளை களை வைத்துத் தொண்டு என்னும் சொல் உருவாக்கப் பட்டது. மேனாட்டு மொழிநூல் அறிஞரான கால்டுவெல்லும் இவ்வாறே "கை" என்னும் உறுப்புப் பெயரிலிருந்து பிறந்ததே ஐந்து என்னும் சொல் எனத் தம் ஒப்பிலக்கண நூலிற் காட்டியுள்ளார். கை - ஐ - ஐந்து என இவ்வாறு திரிபு முறையும் கூறுகிறார். இன்று "ஒருகை போடு இரண்டு கை போடு" என்று உலகவழக்கில், படியாத மக்கள்கூட வழங்குகின்றார்களே! இதுபோலத்தான் தொண்டு என்ற சொல்லும் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது. கடைக்கழகக் காலத்திற்குப் பின்னர்தான் வழக்கற்றுப் போயிற்று.

ஒன்பது+பத்து=தொண்ணூறு எனப் புணர்ச்சி முறை கூறும் தொல்காப்பியர், நிலைமொழியில் உள்ள ஒகர உயிருடன் தகரமெய் சேர்ந்ததாகவும், பின்னர் "பது" கெட்டதாகவும் அதன்பின் னகர வொற்று ணகர வொற்றாய் மாறியதாகவும், வருமொழியில் "பத்து" என்பது நூறென மாறியதாகவும், நிலைமொழியில் ணகரம் இரட்டிக்க. அவ்விரட்டித்த ணகரம் வருமொழியில் உள்ள "நூ" வுடன் சேர்ந்து "ணூ" எனத் திரிபு பெற்றதாகவும் விதி வகுக்கிறார். இவ்வாறே ஒன்பது+நூறு: தொள்ளாயிரம் என்று சொற்புணர்ச்சிசெய்து, நிலைமொழி ஒகரத்தில் தகரமெய் சேர்ந்ததாகவும், வருமொழியில் "நூறு" ஆயிரம் ஆனதாகவும், பின்னர் நிலைமொழி னகர மெய் ளகரமெய்யாய்த் திரிந்ததாகவும், அந்த ளகரமெய் இரட்டித்த பிறகு, இரட்டித்த ளகர மெய்யுடன் வருமொழி முதல்நின்ற "ஆ" சேர்ந்து "ளா" ஆயினதாகவும் விதி கூறுகின்றார்.

இவையெல்லாம் கண்கட்டு வேலைகள் போலல்லவா இருக்கின் றன! ஏதோ மணல் கடலையாவதும், தோல் நரியாவதும் போல மாயமாக இருக்கின்றனவே! இதற்குப் பொருத்தமான மற்றோர் எடுத்துக்காட்டு கூறலாம் என்றால், கேரளம் என்னும் சொல் "நாரிகேள" என்னும் சொல்லி லிருந்து வந்தது என வடமொழியாளர் கூறுவதைச் சொல்லலாம். "நாரிகேள"