கொளுவிவைத்தல். தமிழில், 'போக்குவிப்பி' என்பதுபோன்ற மும்மடி யேவல் கொளுவுநிலைப்பட்டதே. சித்தியமொழிகளும் முண்டாமொழிகளும் கொளுவுநிலைக்குச் சிறந்தவை. எ-கா : முண்டாமொழியில், 'தல்' என்பது 'அடி' எனப் பொருள்படும் வினைச்சொல். 'த - ப - ல் - ஒச்சொ - அகன் - தெஃன் - தயெ - திங் - அ - எ' என்னும் கொளுவுநிலைத் தொடர், 'என்னவனுடையவன் தன்னைப் பொருவிக்கவிடத் தொடர்வான்' ('He who belongs to him who belongs to me, will continue letting himself be caused to fight.) எனப் பொருள்படுவதாகும். இது 'தல்' என்னும் பகுதியொடு பல ஈறுகள் கொளுவிய தொடர். தொகைநிலையாவது, பலசொற்கள் இடைதொகப் புணர்ந்து ஒரு தொடராய் நிற்றல். அமெரிக்க மொழிகள், அவற்றுள்ளும் சிறப்பாக மெக்சிக (Mexican) மொழிகள், தொகைநிலைக்குச் சிறந்தவை. எ-கா : மெக்சிக மொழியில், 'அல்த்'= நீர்; 'சிச்சில்திக்'=சிவந்த; த்லக்த்ல்=மாந்தன்; சொரிய = அழு. இச் சொற்கள், 'அச்சிச்சில்லகச் சொகன்' என்னும் தொகைநிலைத் தொடராகப் புணர்ந்து 'நீர் சிவந்திருப்பதால் மக்கள் அழுமிடம்' எனப் பொருள் தருகின்றது. இங்ஙனம் பல சொற்கள் தொக்க தொகைநிலையைப் பல்தொகை நிலை (Polysynthetic) அல்லது இணைப்புநிலை (Incorporating) என அழைப்பர். சிதைநிலையாவது, சோம்பல், நாகரிகத்தாழ்வு, தட்பவெப்ப நிலை வேறுபாடு முதலிய காரணங்களால் சொற்கள் குறுகியும் திரிந்தும் சிதைந்துநிற்றல். சிதைநிலைக்கு இந்திமொழி சிறந்த எடுத்துக்காட்டாம். தமிழ் இந்தி வடமொழி இந்தி புகல் - போல் க்ருஹம் - கர் நோக்கு - தேக் கருமம் - காம் கொஞ்சம்- குச் வ்ருச்சிகம் - பிச்சு நேரம் - தேர் வார்த்தா - பாத் ஓரம் - ஓர் பஞ்சம் - பாஞ்ச் உழுந்து - உடத் கர்ணம் - கான் மேற்காட்டிய எழுநிலைகளுள், அசைநிலை புணர்நிலை பகுசொன்னிலை ஆகிய முதல் மூன்றும் அடைந்துள்ளது தமிழ். இம் மூன்றே இயல்பாக முழுவளர்ச்சியுற்ற ஒருமொழி அடைய வேண்டியவை. |