பக்கம் எண் :

16மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

3. முதற்றாய் மொழியின் இயல்புகள்

     உலகமொழிகள் பல்லாயிரக்கணக்காகப் பரவிக்கிடப்பினும்,
அவற்றுக்கெல்லாம் ஓரளவில் மூலமாக அல்லது முதலாக ஒரு பெருந் தாய்
மொழி யிருந்திருத்தல் வேண்டும் என்பது, மொழிநூலாற் போந்த முடிபாம்.

     மக்களெல்லாம் ஒரு தாய் வயிற்றினர் என்று கொள்ளப்படாவிடினும்,
மாந்தன் தோன்றிய இடம் ஒன்றே என்பது மாந்தனூலால் தெரிய வருதலால்,
உலகமொழிகட்கெல்லாம் ஆதியில் ஏதேனுமொரு தொடர்பிருந்திருத்தல்
வேண்டும்.

     மொழிகள் யாவும் சிற்றளவாகவும் பேரளவாகவும் திரிந்துகொண்டே
யிருப்பதால், அவற்றுக்குள்ள தொடர்பு முதற்காலத்திலிருந்ததுபோல்
இக்காலத்தில் தெளிவாயில்லை. ஆயினும், ஆழ்ந்து ஆராயுங்கால், அப்
பழந்தொடர்பைக் கண்டறிதற்குச் சில சான்றுகள் கிடைக்கின்றன.

     இதுபோதுள்ள மொழிகளுள், முதற்றாய்மொழியாகக் கருதப்படக்
கூடியவை, வடமொழி (சமற்கிருதம்), தென்மொழி (தமிழ்) என்னும் இரண்டே.
இவற்றுள் வடமொழி யொன்றே மேனாட்டாரால் விரிவாகவும் விளக்கமாகவும்
அறியப்பட்டுள்ளது. தமிழைத் தமிழரும் செவ்வையா யறிந்தாரல்லர். அதனால்,
வடமொழி யொன்றையே, முதற்றாய்மொழியா யிருந்திருக்கலாம் என
மேனாட்டார் கருதிவருவதில், யாதொரு குற்றமும் தப்பெண்ணமு மில்லை.

     ஒரு போலிக்கொள்கையை அல்லது பொய்க்கொள்கையை எத்துணைப்
பேர் கொண்டிருப்பினும், அது நீடித்து நில்லாது, உண்மை என்றைக்கேனும்
வெளிப்படுவது திண்ணம்.

     முதற்றாய்மொழிக்கு, அதற்குரிய சில சிறப்பியல்புகளும் நிலைமைகளும்
உண்டு. அவை, வடமொழி, தென்மொழி என்னும் இரண்டுள் எதற்குள்ளன
என்று பார்ப்போமாயின், முதற்றாய் மொழியைக் கண்டுவிடலாம்.

முதற்றாய் மொழியின் இயல்புகள்

1.மிகப் பழைமையானதா யிருத்தல்.

2.பெரும்பாலும் எல்லா மொழிக்கும் பொதுவான எளிய ஒலிகளையே
கொண்டிருத்தல்.