3. வண்ணனை மொழிநூலின் விளைவு |
(1) பிராமணர் மகிழ்ச்சி |
உலக மூலமொழி அல்லது முதற்றாய் மொழி ஒரு காலத்திற் கண்டறியப்படும் என, சென்ற நூற்றாண்டிடையிலேயே கால்டுவெலார் நம்பி எதிர் பார்த்தார். ஆயின், அதற்கு முற்றும் முரணாக இந்நூற்றாண்டில் வண்ணனை மொழிநூல் வளர்ச்சியுற்றுவருகின்றது. இதைக் கண்டு கழிபெரு மகிழ்ச்சி கொள்பவர் ஆரிய வெறியரே. |
வரலாற்று மொழிநூல் வளரின், வடமொழி தேவமொழி என்பதும் ஆரியமொழிகட்கெல்லாம் மூலமென்பதும், தமிழை வளம்படுத்திற்றென்பதும், வடஇந்திய மொழிகளையெல்லாம் தோற்றுவித்ததென்பதும், ஒப்புயர்வற்ற உலகப் புரட்டென்பது வெட்ட வெளிச்சமாகி விடும். இதை மறைத்து வருவதனாலேயே, வண்ணனை மொழிநூல் பூனாவிலுள்ள தெக்காணக் கல்லூரியிலும் ஏனையிந்திய ஆரிய நிலையங்களிலும் அது பெரிதும் போற்றப்படுகின்றது. |
(2) ஆரிய அடியார் பிதற்று |
மேனாட்டார் சிறந்த அறிவியல் கருவிகளைக் கொண்டு மொழிநூலாராய்ச்சி செய்வதால் அவர் கண்டறிந்த வுண்மைகளெல்லாம் அறிவியன் முற்பட்டவையென்றும், என்போன்றார் கூறுவதெல்லாம் உன்னிப்பு வேலை (guess work) என்றும், கற்ற பேதையரான சில ஆரிய அடியார் கூறிவருகின்றனர். |
முதற்கண் தமிழ்நாடு தென்னிந்தியாவிலன்றி ஐரோப்பாவிலேனும் அமெரிக்காவிலேனும் இல்லையென்றும், தமிழர் அறிவிக்கவே அயல்நாட்டார் தமிழை அறிதல் கூடுமென்றும், அறிதல் வேண்டும். |
இரண்டாவது ஆராய்வார் எத்துணைப் பேரறிஞரேனும் தவறான அடிப்படையில் ஆராய்ந்தால் தவறான முடிபிற்கே வரநேரும் என்பதை அறிதல்வேண்டும். காலஞ்சென்ற (L.D) சாமிக்கண்ணுப்பிள்ளை வானநூலில் மிகத் தேர்ச்சிபெற்றவரேனும் தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டதினால், கி.பி.165போல் மதுரைக்குச் சென்ற கோவலனைக் கி.பி.756-ல் சென்றவனாக முடிபு செய்துவிட்டார். |