பக்கம் எண் :

பழந்தமிழாட்சி35

    தேர்தலதிகாரி, குறித்தநாளில், சிறுவருட்பட ஊரிலுள்ள மக்களையெல்லாம், சபைமண்டபத்தில் அல்லது கோயில் மண்ட பத்திற் கூட்டுவன். புதிய ஆளுங்கணத்தில் உறுப்பினராயிருந்து வாரியஞ் செய்தற்கு ஒவ்வொரு குடும்பாரும், ஊரின் அளவிற்கும் நிலைமைக்கும் தக்கபடி, ஒருவரையோ பலரையோ, ஒரு தடவைக் கொருவராக, குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்க வேண்டி யிருக்கும்.

     தேர்தல் தொடங்குமுன், அரசாணைத் திருமுகத்திலுள்ள தேர்தல் விதிகள் அனைவர்க்கும் படித்துக்காட்டப்பெறும் என்று தெரிகின்றது. அவ்விதிகள், தேர்தல் நடைபெற வேண்டிய முறையும், வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதும், புதிய ஆளுங் கணத்தின் வாரியப் பகுப்பும், ஊர்ச்சபை வினைஞர் கடமையும், அவர் கடமை தவறியவழி அடையவேண்டிய தண்டமும், பற்றியவாகும்.

     தேர்தலை விதிப்படி நடத்தவேண்டிய பொறுப்புப் பெரும் பாலும் அதிகாரிகளுடையதாதலின், ஊர்ப் பொதுமக்கள் முக்கிய மாய்க் கவனிக்க வேண்டியிருந்தவை, வாரியத்திற்குத் தக்கார் தகாதார் யார் யார் என்பதே.

கீழ்க்கண்ட தகுதிகளையெல்லாம் ஒருங்கேயுடையார் தக்காராவர்:

(1) காணிக்கடன் செலுத்தும் நிலம் கால்வேலிக்குக் குறையாமல் உடைமை.
(2) சொந்த மனையிற் கட்டிய வீட்டிற் குடியிருத்தல்.
(3) சிறந்த கல்வி யுடைமை.
(4) காரியம் நிறைவேற்றும் ஆற்றலுடைமை. 
(5) அறநெறியில் ஈட்டிய பொருளைக்கொண்டு செம்மையான
வாழ்க்கைநடாத்துதல்.           
(6) முப்பத்தைந்தாண்டிற்குக் குறையாதும் எழுபத்தைந்தாண்டிற் குக் கூடாதுமிருத்தல்.
(7) முந்திய மூவாண்டிற்குட்பட்டு எந்த வாரியத்திலும் இருந் திராமை.

கீழ்க்கண்டவர் தகாதாராவர்

(1) எந்த வாரியத்திலேனுமிருந்து கணக்குக் காட்டாதார்.
(2) ஐம்பெருங் குற்றம் செய்தோர்.
(3) ஊர்க் குற்றப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டோர்.
(4) பிறர் பொருளைக் கவர்ந்தோர்.