பக்கம் எண் :

6பழந்தமிழாட்சி

"கடல்கிழக்குத் தெற்குக் கரைபொருவெள் ளாறு
 குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில்
 ஏனாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம்
 சோணாட்டுக் கெல்லையெனச் சொல்." 

"மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம்
 ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
 தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
 நற்றொண்டை நாடெனவே நாட்டு." 

"வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
 குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின்
 ஓரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதம்
 சேரநாட் டெல்லையெனச் செப்பு."
 

இவ்வெல்லைகளும் நீடித்து நிற்கவில்லை, முத்தமிழரசரும் பிறரும் ஒருவரையொருவர் பொருது வென்றுகொண்டும் தத்தம் நாட்டை விரிவாக்கிக்கொண்டுமிருந்ததினால், அவர் நாடுகளும் அதற் கேற்பச் சுருங்கியும் விரிந்தும் வந்துகொண்டிருந்தன.

     சங்ககாலத்திற்குப் பிற்காலத்தில், கங்க கட்டிய நாடுகளின் வடபாகத்தில், தடிகைபாடி நுளம்பபாடி எனச் சில சிறுநாடுகள் புதிதாகத் தோன்றின.

     (2) குடிகள்: சேர சோழ பாண்டியம் என முப்பாற்பட்ட தமிழகத்துப் பழங்குடி மக்கள் யாவரும், திரவிடப் பேரினத்தைச் சேர்ந்த தமிழர் என்னும் இனத்தாராவர். அவர் நகர வாழ்நரும் நாட்டு வாழ்நரும் காட்டு வாழ்நரும் மலை வாழ்நருமாய், நால் வகைப்பட்டிருந்தனர். அவருள் ஒருசார் மலைவாழ்நரும், ஒருசார் காட்டுவாழ்நரும் நாகரிகமின்றிக் காட்டு விலங்காண்டிகளாய்  வாழ்ந்து வந்தனர்.

     சித்தர் முனிவர் முதலிய சிறந்த துறவு வகுப்பார் நாட்டிடைப் பிறந்து வளர்ந்தவரேயாயினும், தம் துறவு நிலைபற்றி மலையில் உறைந்து வந்தனர்.

     முழு அநாகரிகரும் மலையுறை துறவியரும் அரசனாட்சிக் குட்பட்டிலர்.

     வட மொழியாளர் எனப்பட்ட பார்ப்பார் (பிராமணர்) தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்நாடு புகுந்து நகரிலும்



4 காட்டு விலங்காண்டி - காட்டு மிருகாண்டி (காட்டுமிராண்டி.)