பக்கம் எண் :

92பழந்தமிழாட்சி

கள்ளியும் நட்டி, நீரட்டிக் கொடுத்து, பெரும் பணைக்காரன் என்னும் அதிகாரி வாயிலாய், செப்பேட்டில் அரசாணை (ஆணத்தி) பொறிப்பது மரபு. பெண்யானையை விட்டு எல்லையமைத்தல் பிடிசூழ்ந்து படாகை நடத்தல் எனப்படும். தானஞ் செய்யப்படும் ஊரிலுள்ள உழுவித்துண்பார் காராண்மை என்னுஞ் சொல்லா லும், உழுவித்துண்பார் மீயாட்சி என்னுஞ் சொல்லாலும் குறிக்கப்பெறுவர். இனி, ஓர் ஊரை மேற்பார்க்குங் கூட்டமும் மீயாளுங்கணம் எனப்படும். நீரட்டிக் கொடுத்த செப்பேட்டுத் தான மெல்லாம் அட்டிப்பேறு எனப்பட்டன.


     கோயிற்கு விடப்படும் நிலமெல்லாம் இறையிலியாக இருக்க வேண்டியிருந்தமையின்அரசன் தானாய்ச் செய்யாத தேவதான மெல்லாம் அவனுடைய இசைவு பெற்றே செய்யப்பட்டன. அங்ஙனஞ் செய்யும்போது, இறைநீங்கலால் அரசிற்கு ஏற்படும் இழப்பிற்கு ஈடாக, தானஞ் செய்பவன் அல்லது செய்பவர் ஒரு குறித்த தொகையைப் பண்டாரத்திற் சேர்க்கும்படி ஊரவையாரிடம் கொடுத்துவிடுவது வழக்கம்.


     ஒரு நிலம் அல்லது ஊர் இறையிலியாக்கப்படும் போது, அதன் இறைநீக்கம் இறங்கல் என்றும், அதை இறையிலிப் பதிவுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதுதல் நீங்கல் அல்லது நாட்டு நீங்கல் என்றும் குறிக்கப் பெறும். வரிக்கணக்கையும் நிலங்களின் நிலைமை யையும் எந்தச் சமயத்திலும் தெரிந்து கொள்ளற் பொருட்டு, பல்வேறு கணக்குகள் வைக்கப்பட்டிருந்தமையின், சில சமயங் களில் ஓர் இறையிலி ஆணைக்கு ஐம்பதின்மருக்கு மேற்பட்ட அதிகாரிகள் கைந்நாட்டிட வேண்டியிருந்தது. இறுதியில் அரசன்இடும் முடிவான ஆணை கடையீடு எனப்பட்டது.


     நாட்டுக் குழப்பத்தினால் இழக்கப்பட்ட மானிய வுரிமையை, குழப்பம் நீங்கியபின் சான்றுகாட்டி மீண்டும் பெற்றுக்கொள்ள அக்காலத்து இயல்கை (சாத்தியம்) இருந்தது. களப்பாளர் ஆட்சி யில் இழக்கப்பட்ட வேள்விக்குடிப் பிரமதேயவுரிமை, இரு நூற்றாண்டிற்குப் பின் மீள நாட்டப்பெற்ற பாண்டிய வாட்சியின் ஏழாம் தலைமுறையில் புதுப்பிக்கப்பெற்றது.


     சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், பரணர்க்குத் தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்தது மகற்கொடையாகும். மகற் கொடையாவது மகனை மாணவனாகக் கொடுத்தல்.


     தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, அரிசில்கிழார்க்குத் தன் அரியணையைக் கொடுத்தது ஆட்சிக்கொடையாகும். ஆயின், அவர் அதை ஏற்க மறுத்து அவனிடம் அமைச்சுப் பூண்டார்.