பக்கம் எண் :

40பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   யானைக்குக் கொடுக்கும் கவளமும் நெய்யில் மிதித்துத் திரட்டப்பட்டதினால், நெய்ம்மிதி எனப் பெயர் பெற்றது. சமையல் வகைக்கெல்லாம் ஆவின் நெய்யையே அக்காலத்தில் பயன்படுத் தினர். நல்லெண்ணெய் என்னும் எள்நெய் தலைமுழுக்கிற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது.

   அரசரும் மறவரும் பாணரும் கூத்தரும் பொருநரும் புலவர் சிலரும் உழவரும் உழைப்பாளியரும், குடிப்பு வகைகளுள் கள்ளையே சிறந்ததாகக் கொண்டனர். கள் என்னுஞ் சொல் வெறிநீர், பதநீர் (தெளிவு அல்லது பனஞ்சாறு), மட்டு (சர்பத்து), தேன் என்னும் நால்வகைகையுங் குறிக்கும். இந்த நான்கையும் பயன்படுத்தினர் பண்டைத் தமிழர். இவற்றுள் வெறிநீர் வகையே வள்ளுவரால் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்திற் கண்டிக்கப்பட்டது.

   வெறிநீர் இயற்கைக் கள்ளும் செயற்கைக் கள்ளும் என இருவகைத்து. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் ஈச்சங்கள்ளும் இயற்கை; அரிசிச் சோற்று நீரைப் புளிக்க வைத்து அரிக்கப்பட்ட அரியலும், மேனாடுகளினின்று புட்டிகளில் வந்த மதுக்கள்ளும் செயற்கை.

"யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்" (புறம்.56:18)

   வெப்ப நாடாகிய தமிழகத்தில், காலையிலிருந்து கதிரவன் அடையும்வரை காட்டில் கடுவெயிலில் வருந்தியுழைக்கும் உழ வர்க்கு, உழைப்பு நோவைப் போக்கவும் நீர்வேட்கையைத் தணிக் கவும், வெறிப்பும் குளிர்ச்சியும் புளிப்புமான குடிப்பு வேண்டியதா யிருந்தது. அதனால், அவர்க்கென்று தனிக் கள் உண்டாக்கப்பட்டது.

"களமர்க் கரித்த விளையல் வெங்கள்" (புறம்.212:2)

என்பது இதையுணர்த்தும்.

   கள்ளின் புளிப்பையும் வெளிப்பையும் மிகுக்க, அதைக் கண்ணாடிக் கலங்களிலும் மூங்கிற் குழாய்களிலும் இட்டு மூடிப் பன்னாள் மண்ணிற் புதைத்து வைப்பதும் வழக்கம். அத்தகைய கள்ளின் கடுமைக்குத் தேட்கொட்டும் பாம்புக் கடியும் உவமை கூறப்பட்டுள்ளன.


"நிலம்புதைப் பழுனிய மட்டின் தேறல்" (புறம்.120)
"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்" (புறம்.392:16)
"பாப்புக்கடுப் பன்ன தோப்பி" (அகம்.348:7)
தேறல்=தெளிந்த கள். தோப்பி=நெற்கள்.