"இவன்இவள் ஐம்பால் பற்றவும் இவள்இவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிரா தேதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னஇவர் மணமகிழ் இயற்கை காட்டி யோயே" (குறுந்.229) என்பது, உரிமைப் பெண்ணை ஊழ் இணைத்து வைத்தாகக் கூறியது. "செங்கோல் வேந்தன் உழவ னாகி இராமழை பெய்த ஈர வீரத்துள் பனைநுகங் கொண்டு யானையேர் பூட்டி வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும் வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே செங்கேழ் வரகு பசுங்கதிர் கொய்து கன்று காத்துக் குன்றில் உணக்கி ஊடுபதர் போக்கிமுன் உதவினோர்க் குதவிக் காடுகழி யிந்தனம் பாடுபார்த் தெடுத்துக் குப்பைக் கீரை யுப்பிலி வெந்ததைச் சோறது கொண்டு பீற லடைத்தே இரவல் தாலம் பரிவுடன் வாங்கி ஒன்றுவிட் டொருநாள் தின்று கிடப்பினும் நன்றே தோழிநம் கணவன் வாழ்வே" என்பது, பெருமைப் பெண் தன் கணவனொடு தான் வாழும் இன்ப வாழ்க்கையை எடுத்துக் கூறியது. "வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நய வேன்தெய்வம் மிக்கனவே." (6) என்னும் திருக்கோவைச் செய்யுள், உழுவற் பெண்ணைக் கூட்டி வைத்ததெய்வத்தைக் காதலன் பாராட்டியது. "யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." (குறுந்.40) என்பது, காதலன் தன் உழுவற் பெண்ணை நோக்கிக் கூறியது. மூவகைப் பெண்களுள்ளும் உழுவற் பெண்ணை மணப்பதே குலமத |