பக்கம் எண் :

முல்4 (பொருந்தற் கருத்துவேர்)27

முல்4 (பொருந்தற் கருத்துவேர்)
     பொருந்தற் கருத்தினின்று ஒத்தல், முட்டுதல், சேர்தல், கூடுதல், மணத்தல், கலத்தல், பொருதல் முதலிய கருத்துகளும்; ஒத்தற் கருத்தினின்று, அளவிடுதல், மதித்தல், செருக்குதல் முதலிய கருத்துகளும்; முட்டுதற் கருத்தினின்று தடை, முடை, முடிவு முதலிய கருத்துகளும்; சேர்தற் கருத்தினின்று திரளுதல், பகுத்தல், விரிதல், மிகுதல், செழித்தல், அழகாதல் முதலிய கருத்துகளும்; பருத்தற் கருத்தினின்று மொத்தமாதல், வலுத்தல் முதலிய கருத்துகளும்; கலத்தற் கருத்தினின்று கலக்கம், மயக்கம் முதலிய கருத்துகளும்; மயக்கக் கருத்தினின்று இருட்சி, கருமை முதலிய கருத்துகளும் வழிநிலைக் கருத்துகளாகப் பிறக்கும். இவற்றினின்று மேற்கொண்டும் சில கிளைக் கருத்துகள் தோன்றும்.
     முல்-முல்லை = குத்தகை (யாழ்ப்.). முல்லைக்காரன் = குத்தகைக்காரன்      (யாழ்ப்.).
     ஒரு பொருள் முழுவதையும் குறித்த காலத்திற்குப் பயன்படுத்தச்      செய்துகொள்ளும் ஒப்பந்தம் குத்தகை.
     முல்லை-மொல்லை = 1. மேழம் (பருத்த செம்மறியாட்டுக் கடா). 2.      மேழவோரை (சூடா. உள். 9).
     மொல்லையிற் போடுதல் = குடும்பப் பொதுச் செலவிற்குக் கொடுத்தல்.
     மொல்-மொலு. மொலு மொலு வெனல் = ஈக்கள் மொய்த்தற் குறிப்பு.
     மொல்-மொலோர். மொலோரெனல் = சிறுமீன் கூட்டம் நீர்மட்டத்தில்      துள்ளிவரும் ஒலிக் குறிப்பு.
     ஒ.நோ: அர. முலாகாத் = சந்திப்பு.
     இந். மில்னா = சந்திக்கை, சந்திக்க; மில் = சந்தி(முதனிலை).
     முல்-மல் = 1. பருமை (யாழ்ப்.). 2. வளம். "மற்றுன்று மாமலரிட்டு" (திருக்கோ. 178). 3. வலிமை (பிங்.). 4. மற்போர். "மல்லலைத் தெழுந்து வீங்கி" (சீவக. 268). 5. மல்லன். "மல்லொடு கஞ்சனுந் துஞ்ச வென்ற மணிவண்ணன்" (திவ். பெரியதி. 11 : 2 : 3). 6. கண்ணபிரான் மல்லனாய் வாணாசுரனை வென்றாடிய கூத்து (பிங்.).
     பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள் பொருந்துவதால்(ஒன்றுசேர்வதால்) திரட்சி அல்லது பருமை உண்டாகும்.