பக்கம் எண் :

விள்2 (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்து வேர்)141

வெள்ளை = கள்ளங் கரவற்ற-வன்-வன்-து. "வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை" (கொ. வே. 87).
     வெண்பா = பிறதளை கலவாத தூய பா.
4. விளைவின்மைக் கருத்து
     முதிர்ந்து வயிரம் பாய்ந்த மரம் பொதுவாகக் கருத்தும், விளையாத மரம் வெளிறியும் இருப்பதனால், வெண்மைக் கருத்தினின்று, விளைவின்மைக் கருத்துத் தோன்றிற்று.
     வெள்ளை = 1. விளையாத மரம். "வெள்ளை சொட்டை கருப்பு வயிரம்" (பழ.). 2. கருத்தாழமின்மை. "நாவினில் விளையு மாற்ற நின்றிரு வடிவினு மிகவெள்ளை யாகியது" (பாரத. உலூகன். 4). 3. அறிவில்லாதவன்.
     வெளிறு = 1. இளமை. "வெளிற்றுப் பனந்துணியின்" (புறம். 35). 2. திண்மையற்றது. "வெளிறான இருளன் றிக்கே" (ஈடு, 2:1:8). 3. வயிரமின்மை. "வெளிறி னோன்காழ்" (புறம். 23). 4. வெளிற்றுமரம். "வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ" (சீவக. 2613). 5. அறிவின்மை.
 
"அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
 இன்மை யரிதே வெளிறு"
(குறள். 503)
 
     6.பயனின்மை. "வெளிற்றுரை விடுமி னென்றான்" (சீவக. 1431).
7. குற்றம். "வெளிறில் வாள்" (சீவக. 3074).