பக்கம் எண் :

32
 
மூன்று அறைகளும் ஒரு முற்றமும் இருந்தன. இதுபோன்ற தொழிலாளர்
குடியிருப்புக்கள் பண்டை நாளில் எகிப்தில் முதல் முதல் டெல் எல்எமரா என்ற
இடத்தில் மட்டுமே இருந்ததாக அறிகிறோம் ஆனால் எகிப்தில் இரு வரிசைகள்
கிடையாது. முற்றமும் கிடையாது. மேலும் எகிப்தில் அவை முதல் முதல் கி.மு. 2000-
லேயே கட்டித்தரப்பட்டன. மொகஞ்சதரோவிலோ, அவை கி.மு. 2500-க்கு முன்பே
காணப்படுகின்றன. மொகஞ்சதரோ இங்ஙனம் காலத்தினால் முந்தியதாயிருப்பதுடன்,
தொழிலாளர் உடல்நல வாய்ப்புத்திட்டங்களில் எந்நாட்டுக்கும் மேம்பட்டதாகவும்
அமைந்திருக்கிறது.
 
     சென்ற இரண்டாயிர ஆண்டுகளாக தென்னாட்டு நாகரிகமும் கீழ்நாட்டு
நாகரிகங்களும் பெரிதும் கிராம நாகரிகங்களாகவும், விவசாய நாகரிகங்களாகவுமே
இருந்து வருகின்றன. ஆனால் தொல்பழங்காலத்துக்குரிய இவற்றின் மூலமுதலான சிந்து
வெளி நாகரிகம் இக்கால ஐரோப்பிய அமெரிக்க நாகரிகங்கள் போலவே நகர் சார்ந்த
நாகரிகமாகவும், வாணிகமும் கைத்தொழிலும் பேரளவில் சிறந்திருந்த நாகரிகமாகவுமே
இருக்கக்காண்கிறோம். சிந்து வெளி மக்கள் அன்று உள்நாட்டில் தமிழகத்துடனும்,
கங்கை வெளியுடனும், வெளியுலகில் பாரசிகம், மெசெபொட்டேமியா, எகிப்து முதலிய
நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
 
     அக்கேடிய நாட்டில் சிந்துவெளி மக்களின் ஒரு வணிகக் குடியேற்றமே
இருந்ததாகக் கூறப்படுகிறது. கைத்தொழிலாளரும் வணிகரும் சிந்து வெளியிலிருந்து
சென்று தைக்ரிஸ், யூப்பிரட்டிஸ் ஆற்றோரங்களில் உள்ள வணிகக்களங்களில் தங்கள்
சரக்குகளை நேரடியாக விற்பனை செய்தார்கள். இதுபோல சுமேரியக் கலை
நுட்பங்களும், மெசெபொட்டேமியாவிலுள்ள நாள் ஒப்பனைப் பொருள்களும்
முத்திரைகளும் சிந்துவெளியில் பின்பற்றப்பட்டன. இருதிசைகளுக்கும் இடையிலுள்ள
வாணிகம் இன்பப் பொருள்கள், மூலப்பொருள்கள் ஆகியவற்றுடன் நிற்கவில்லை.