சிந்துவெளி நாகரிகத்துடன் எகிப்து, மெசெபொட்டேமியா போன்ற தொல்பழ நாகரிகங்களை ஒப்பிட்டு *சர்ஜான் மார்ஷல் என்பவர் வகுத்துரைக்கும் அதன் சிறப்புக் கூறுகள் வருமாறு: |
சிந்து வெளிக்கன்றி வேறெந்தப் பழங்கால நாகரிகங்களுக்கும் உரியன அல்லாத கூறுகள் பல. சிந்துவெளி மக்களின் சமய வாழ்வில் பல நாட்டு மக்கள் சமயக் கூறுகளின் ஒப்புமைகளைக் காணலாம். ஆனால் இது பழங்கால நாகரிகங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொதுப் பண்பே தவிர வேறன்று. அவ்வாழ்வை ஒரே முழுவாழ்வாக நோக்கினால், அது பேரளவில் இன்றைய இந்நாட்டு மக்களின் சமயவாழ்வுடன் இணைப்புடைய கருமுதல் நிலையாகவே காணப்படுகிறது. வேறு எந்த நாட்டுச் சமய வாழ்வுடனும் அதை இணைக்க முடியாது. |
'சிந்துவெளியின் கலைப்பண்புக்கு ஈடாக, அதனோடொத்த, அல்லது அதனை அடுத்த பழமையுடைய எந்த நாட்டின் கலையையும் கூறமுடியாது. களிமண்ணால் செய்யப்பட்ட செம்மறியாடு, நாய், முத்திரைகளில் செதுக்கப்பட்டுள்ள குறுங் கொம்புடைய நெடுந்திமில் எருதுகள் ஆகியவை மறைந்த இந்நாகரிகத்தின் ஒப்பற்ற கலைச் செல்வங்கள். அவற்றின் உருவமைதியும் வடிவழகும் என்றும் எந்நாட்டுக்கும் பெருமை தருவன. கலையுலகில் கிரேக்கரின் கலைப்பண்புகள் தவிர வேறு எவையும் ஹரப்பாவில் கிடைத்துள்ள இரண்டு மனித உருவங்களுக்குச் சரிநிகராகப் போட்டியிட்டு நிற்கமாட்டா!' |
தென்னாட்டுடன் சிந்துவெளியைப் பிணைக்கும் மற்றொரு செய்தி அதன் நெசவுத் தொழிலாகும். கம்பளியும் அன்று வழங்கப்பட்டதாயினும், பருத்தியே பேரளவில் நூற்று நெய்து ஆடையாகப் பயன்படுத்தபட்டது. உலகில் வேறெந்தநாட்டிலும் அன்று பருத்தி, நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்படவில்லை. சிந்துவெளி நாகரிகக் காலத்திற்குப்பின் 2000 அல்லது 3000 ஆண்டுகள் கழிந்த பின்னரே அது வெளியுலகில் பரவத் தொடங்கிற்று! |
|
* Sir John Marshall |