தேவலோகத்து விருந்து போன்ற சமையல் பக்குவம். வீரேசலிங்கம் பந்துலுக்கு மூர்ச்சை போடத் தெரிந்தது. இத்தனை ருசியான உணவை அவர் தம்முடைய ஜன்மத்தில் உண்டதில்லை. கனவில் கண்டதில்லை. கற்பனையில் எட்டினதில்லை. தின்னத் தின்னத் தின்ன ருசி தெவிட்டவே யில்லை. கோபாலய்யங்காருடைய முகத்தைப் பந்துலு ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் முகத்தை அய்யங்கார் ஒரு முறை திரும்பிப் பார்த்தார். பந்துலுவின் மனைவி பரிமாறிக் கொண்டிருந்தாள். "யாருடைய சமையல் தெரியுமா?" என்று பந்துலுவின் மனைவி கேட்டாள். "காலையில் வந்தாளே, அந்தப்பெண்ணுடைய சமையலா?" என்றார் பந்துலு. "ஆம்" என்றாள் பந்துலுவின் மனைவி. "அந்தப் பெண்ணை இங்குச் சற்றே வரச்சொல். நம்முடைய கோபாலய்யங்கார் அவளுடைய முகத்தின் அழகையும் அவள் சொல்லின் அழகையும் அவளறிவின் அழகையும் பார்க்க வேண்டும். சமையலழகை மாத்திரம் பார்த்தால் போதுமா? அந்த மகா சுந்தரியின் சகல சௌந்தர்யங்களையும் பார்க்க வேண்டாமா?" என்றார் வீரேசலிங்கம் பந்துலு. "அவளுக்குப் பலமான தலை நோவு. சமையல் சிரமம், யாத்திரை சிரமம் எல்லாம் சேர்ந்து அவளுக்குத் தலைநோவு உண்டாக்கிவிட்டன. இராத்திரி அவளுக்கு உடம்பு நேராய்விடும். அப்போது அய்யங்கார் அவளைப் பார்க்கலாம்" என்று பந்துலுவின் மனைவி சொன்னாள். அப்பால் நெடுநேரம் இருவரும் ஆகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். போஜனம் முடிந்து கை கழுவி விட்டுப் பந்துலுவும் அய்யங்காரும் மறுபடி பந்துலுவின் படிப்பறையில் வந்து நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். மேஜை மேல் பந்துலுவின் மனைவி கொண்டுவந்து வைத்த தாம்பூலத்தை எடுத்துப் போடத் தொடங்குகையில் "இதுவே சுவர்க்கம்" என்று பந்துலு சொன்னார். |