அதி சிரமமான காரியம். ஜன்ம முதலாக நமக்கு ஏற்பட்ட விசேஷ ஸம்ஸ்காரங்களாலும் கணக்கில்லாத அனந்தகோடி சிருஷ்டிகளில் அனந்த கோடிகளாகத் தோன்றி மறையும் ஜீவ குலத்துக்குப் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பூர்வ ஸம்ஸ்காரங்களாலும் மனிதருக்கு இயல்பாகவே மற்ற உயிர்களிடமும், மற்ற மனிதரிடமும், பெரும்பாலும் பயம், வெறுப்பு, பகைமை துவேஷ குணங்கள் ஜனிக்கின்றன. பல உயிர்களிடம் அன்பும் நட்பும் ஜனிப்பது முண்டு. ஆனால், பொதுவாக ஜீவர்கள் இயற்கையிலேயே ஒருவருக்கொருவர் சகிப்பில்லாமை, அசூயை முதலிய குணங்களுடையோராகின்றனர். இந்த அநாதியான ஜீவ விரோதம் என்ற குணத்தை நீக்கி சர்வ ஜீவகாருண்யமும் சர்வ ஜீவ பக்தியும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற இச்சை சோமநாதய்யருக்கு உண்டாயிற்று. எனவே, அவர் ஆடு மாடுகளைக் கண்டால் முன்போல் இகழ்ச்சிக் கொள்கை கொள்வதில்லை. ஏழைகளைக் கண்டால், கொடிய நோயாளிகளைக் கண்டால், குரூபிகளையும், மிகுந்த முதுமையால் உருச் சிதைந்து விகார ரூபமடைந்திருப்போரையுங் கண்டால், அருவருப்பு எய்திமுகஞ் சுளிப்பதை நிறுத்தி, அவர்களை மானஸிகமாக வந்தனை செய்யவும், ஆசீர்வாதம் பண்ணவும், இயன்றவரை புறக்கிரியைகளாலும் அவர்களுக்கு இனியன செய்யவும் முயன்றார். இதுவரை தமக்குக் கோபமும் அருவருப்பும் விளைவித்துத் தம்மால் இகழ்ச்சியுடனும் எரிச்சலுடனும் புறக்கணிக்கப் படும் மனிதர்களைக் காணும்போது முகமலர்ச்சி கொள்ளவும், அவர்களிடம் தாழ்மை யுரையும் இன்சொற்களும் பேசவும் பழக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார். இஃதெல்லாம் ஆரம்பத்தில் அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இஃதனைத்திலும் சிரமம் யாதென்றால், அவருக்கு முத்தம்மாளிடம் சுமுகமாக இருந்து அவளிடம் அன்பு காட்டுதல். |