அவனுக்கு ஹிதத்தை நாடுவோர் அப்போது செய்யத்தக்கது யாது? அவனுக்கு ஊசி குத்துவதனால் வேதனையைப் பொருட்டாக்கக் கூடாதென்று அவனிடம் நிஷ்கருணையாகத் தெரிவித்துவிட்டு ஊசியை ஆழமாகப் பதித்து விஷ முள்ளை எடுத்துக் களைதல் நன்றா? அல்லது, ஊசியைப் புறத்தே போட்டுவிட்டு அவனுக்கு ஜிலேபி காபியால் விஷ முள்ளின் செயலை நிறுத்திவிடலாம் என்று அவன் நினைப்பது மடமையன்றோ? அதற்கு நாம் இடங் கொடுக்கலாமோ? அவன் அழ அழ, ஊசியை அழுத்தி விஷ முள்ளை எடுத்தெறிந்தாலன்றி அவனுக்கு விஷமுள்ளின் செய்கையால் மரண மேற்படுமென்பதை அவனுக்கு வற்புறுத்திக் கூறி எங்ஙனமேனும் ஊசியை உபயோகித்தலன்றோ உண்மையான அன்புக்கும் கருணைக்கும் அடையாளமாவது? இங்ஙனம் ஆலோசனை புரிந்தே, முத்தம்மா நமது சோமநாதய்யருக்கு அடிக்கடி விளாற்றுப் பூஜைகள் நடத்தி வந்தாள். இங்ஙனம் நல்லெண்ணங் கொண்டே அவள் தம்மிடம் கடுஞ் சொற்களும், கடுநடைகளும் வழங்குகிறாளென்ற விஷயம் நாட்பட சோமநாதய்யருக்கும் சிறிது சிறிது அர்த்தமாகத் தொடங்கிவிட்டது. இருந்தபோதிலும் அவரால் சகிக்க முடியவில்லை. காதற்கோயில் மிகத் தூய்மை கொண்ட கோயில். ஒருமுறை அங்கு போய்ப் பாவஞ் செய்து வெளியே துரத்துண்டவன் மீளவும் அதனுள்ளே புகுமுன்னர் அவன் படவேண்டிய துன்பங்கள் எண்ணிறந்தன. கண்ணைக் குத்திப் பார்வையை அழித்துக் கொள்ளுதல் சுலபம். ஆனால் இழந்த பார்வையை மீட்டும் ஏற்படுத்திக் கொள்ளுதல் எளிதில் இயல்வதொரு காரியமா? சோமநாதய்யருக்குக் குருட்டுக் கண்ணை மாற்றி மறுபடி நல்ல கண்கொடுக்க வேண்டுமென்ற விருப்பத்துடன் முத்தம்மா வேலை செய்தாள். அதில் அவள் செய்த சிகிச்சைகள் அவருக்குச் சகிக்க முடியாதனவாகவே யிருந்தன. |