பக்கம் எண் :

சாஸ்திரியார் மகன்

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய்:"குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பையன்:"வண்டி ஒடிஞ்சு போச்சு."

சிப்பாய்:"இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்."

பையன்:"எங்கப்பா சாஸ்திரியார்; அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு இழவுந் தெரியாது" என்று விம்மி விம்மியழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.