பக்கம் எண் :

கிளிக் கதை

எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்காந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கந் தொடங்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி:

"முருகா, முருகா, ஒரு கதை சொல்லு" என்பான்.

உடனே கிளி ஏதோ கங்கா மங்கா வென்று குழறும். பரதேசி சொல்லுவான்:

"அடியார்களே இங்கிருப்பது கிளியன்று. இவர் சுகப் பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.

கங்கா மங்கை மைந்தன்
       பாம்பைத் தின்றது மயில்
       மயிலின் மேலே கந்தன்

"இதன் பொருள் என்னவென்றால்......" இவ்விதமாகத் தொடங்கிப் பரதேசிக் கந்த புராண முழுவதையும் நவரஸங்களைச் சேர்த்துச் சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து போய் பொன் பொன்னாகப் பாதகாணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர் மனுஷ்யர் அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகஸ்யம்.