பக்கம் எண் :

காற்று ஈ - மாலை நேரம்

அவ் வனத்தின் வழியே ஒட்டகங்களின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.

வாயு, சண்டனாகி வந்து விட்டான்.

பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யமவாதனை; வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது.

வாயு கொடியவன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது.

அவன் செயல்கள் கொடியன. அவனை வாழ்த்துகின்றோம்.

வீமனும் அனுமானும், காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.

உயிருடையன வெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.

உயிர்தான் காற்று.

பூமித் தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சுத் தான் பூமிக் காற்று.

காற்றே உயிர். உயிர்களை அழிப்பவனும் அவனே.

காற்றே உயிர். எனவே, உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.

மரண மில்லை.

அகில வுலகமும் உயிர் நிலையே.

தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல்.

உயிரை வாழ்த்துகின்றோம்