"எனக்கு வயது தொளாயிரத்துத் தொண்ணூற்றென்பது தான் போலும்!" என்று விக்கிரமாதித்தன் பெருமூச்சு விட்டான். அப்பொழுது ஸ்ரீமுகி சொல்லுகிறாள்:- "காந்தா, நீ எனது குமாரன். என் சொற்படி கேள். தர்மம் பெண்ணால் ஏற்படுத்தப்பட்டது. விரதம், தவம், பூஜை, ஆகாரம், வீடு, பள்ளிக்கூடம் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்தது பெண். தர்மம் பெண்ணால் உண்டானது. பெண் தாய். பெண்ணைத் தன்னில் பாதியென்று கருதாமல், தனக்கு அது பகுதிப்பட்டிருக்கவும் வேண்டும். ஆனால் தான் அதைத் தன் பகுதியாகத் தானாக, நேகிக்கவும் மாட்டேன் என்று ஆண் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறது. அதற்காகப் பெண் பழி வாங்குகிறது. ஆணைப் பழி வாங்கி அந்தத் துயரத்தில் தானும் மடிகிறது. "சிவன் பாதி, சக்தி பாதி போலச் சரி பாதியாக எப்போது ஆண் பெண்ணை ஒப்புக்கொள்ளுகிறதோ, அப்போது ஆணுக்குப் பெரிய வலிமை சித்திக்கிறது. கலியுக முடிவில் இது முற்றிலும் பரிபூரணமாக நிகழும்" என்றாள். "அப்போது நமது மகாகாளி தேவிக்கு நாமமென்ன?" என்று விக்கிரமாதித்தன் கேட்டான். அப்போது ஸ்ரீமுகி சொல்லுகிறாள்: "அப்போது மகாகாளி தேவிக்கு நித்திய கல்யாணீ உஜ்ஜயிநீ என்று பெயர்." "இதற்கு யாரெல்லாம் சாக்ஷி?" என்று விக்கிரமாதித்தன் கேட்டான். "இதற்குத் தேவர் சாக்ஷி; பஞ்ச பூதங்கள் சாக்ஷி; மனுஷ்ய, மிருக, பக்ஷி, கீடாதி ஜந்து கணங்கள் சாக்ஷி; இதற்கு அந்த மகா காளியே சாக்ஷி" என்று ஸ்ரீீமுகி சொன்னாள். "சரி" என்று சொல்லி விக்கிரமாதித்தன் இருந்து விட்டான். |