பக்கம் எண் :

தத்துவம் - நவசக்தி மார்க்கம்

சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல்சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.

பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வலோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்தமதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்ஸர்"என் தாய் காளி? என்று தான் "பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள்வணங்கும் "லோக மாதா" இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள்தெரிந்து போற்றும் முறையே நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்:

" பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்,
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
காயச் சித்திகளு முண்டு."
          - மலைவளர் காதலி, முதற் பாட்டு.

இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது.

குருக்களுக்குள்ளே மேற்படி மதவேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தம் தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராசார்யார் "கொள்கையை அனுசரிப்போர், ''எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம்'' என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும் சித்தர்களும் இடைக்கிடையே தோன்றி, ''ஒரே பரம்பொருளைத்தான் ஆறுமதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன'' என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக்கூறலாம். ''ஒருவாறு'' என்றேன்; ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுவதும் க்ஷீணமடயவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுதிலும் கணபதி பூஜை உண்டுஆனால் கணபதியே முதற்கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவிநிற்கவில்லை. மஹாராஷ்டிரத்தில் இக் கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள்இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.