பக்கம் எண் :

காமதேனு - துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை

ஆனால் இன்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால் வெட்டி எறிந்து விட்டு இன்பங்களை மாத்திரம் சுவை கொள்ளவேண்டுமென்று ஜீவன் விரும்புகிறது. துன்பங்களை வெட்டிஎறியத் திறமைகொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரியபெரிய கஷ்டங்கள் பட்டபிறகுதான், சிறிய உண்மைகள்புலப்படுகின்றன. நம்மைச்சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும். சூழ்ந்திருக்கும் ஊரார் தேசத்தார் உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும் படி நாம் செய்யவேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள நிறைவேற வேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக்கொண்டு வரவேண்டும். நிலை கொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால் பல வருஷங்கள் ஆகின்றன. கல்வியில்லாதவர் கற்றுத்தேறப் பல வருஷங்கள் ஆகின்றன. உலகத் தொழில்களிலே தேர்ச்சியடைய வேண்டுமானால் அதற்குக் "காலம் வேண்டும். ஆத்ம ஞானம் பெறுவதற்குக் காலம் வேண்டும். 'பொறுத்தவன் பூமியாள்வான்.''பதறின காரியம் சிதறும்' இடையே குறுக்கிடும் மரணம். இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மாலஇயன்ற வரையில் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டு நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது இதனிடையே மேற்படி பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய் விட்டால் என்ன செய்வது?  தூங்கையிலே வாங்குகிற மூச்சு, அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்ஸை இது?  நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து விடலாம். ''அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை'' என்று தீர்ந்துவிட்டால் எதைக் கொண்டாடுவது? இது கட்டிவராது. எப்படியேனும், தேகத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். நமது காரியம் முடிந்த பிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாக மாட்டோம். நம் இச்சைகள், நமுடைய தர்மங்கள் நிறைவேறும்வரை நமக்கு மரணமில்லை.