பக்கம் எண் :

ஓம் சக்தி - யேசு கிருஸ்துவின் வார்த்தை

யேசுவினிடம் ஒரு நாள் ஒரு மனிதன் வந்து "ஸ்வாமி எனக்கு நித்ய வாழ்வு வேண்டும். அதற்கு உபாயம் என்ன?"  என்று கேட்டான்.

அதற்கு யேசு சொன்னார்:-  "ஈசன் கட்டளைகள் பத்து. அவற்றின்படி நட. விகபசாரம் பண்ணாதே, சொல்லாதே, திருடாதே, பொய்ச்சாட்சி சொல்லாதே, வஞ்சனை பண்ணாதே, தாய் தந்தையரைப் போற்று" என்று. வந்த மனிதன்: "நான் இந்த விதிகளை எல்லாம் தவறாமல் நடத்தி வருகிறேன்" என்றான். அப்போது யேசு கிருஸ்து:  "ஒரு குறை இன்னும் உன்னிடத்திலே இருக்கிறது. வீட்டுக்குப்போய் உன்னுடைய சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடு. உனக்கு மோக்ஷச் செல்வம் உண்டாகும். சிலுவையை (அதாவது வேள்வி விரதத்தைக்) கைக்கொண்டு என்னுடனே வா" என்றார்.

வந்த மனிதன் இந்த வார்த்தையைக் கேட்டு மிகவும் துயரத்துடன் திரும்பிப்போனான். அவன் பெரிய பணக்காரன். அவ்வளவையும் ஏழைகளிடம் கொடுத்து விட்டுச் சிலுவையைத் தூக்கிக்கொண்டு யேசுவின் பின்னே போவதில் அவன் மனத்திற்கு இன்பந்தோன்றவில்லை. அப்போது யேசு கிருஸ்து பக்கத்திலிருந்த தமது சீடரை நோக்கிச் " செல்வமுடையார் மோக்ஷ ராஜ்யத்தில் புகுதல் மிகவும் அரிது" என்றார். சீடரெல்லாம் இதைக் கேட்டு வியப்பெய்தினர் ஸஹஜந்தானே?பணம் நிரம்ப வைத்திருப்போர் யார்?  ராஜா, மந்திரி, ஸேனாதிபதி, வியாபாரி, ஜமீன்தார், கோயிலதிகாரிகள், மடாதிகாரிகள் - இத்தனை பேருக்கும் மோக்ஷம் ஸந்தேஹமென்று சொன்னால் கேட்போருக்கு வியப்புண்டாவது ஸஹஜந்தானே? குருக்கள் கூட நரகத்துக்குத்தானா போகவேண்டும்? யேசுகிருஸ்து பின்னும் சொல்லுகிறார்:-"மக்களிலே செல்வமுடையோர் ஈசனுலகத்திற்குள்ளே புகுதல் மிகவும் அரிது. ஊசித்தொளையில் ஒட்டகை நுழைவதைக் காட்டிலும், செல்வன் மோக்ஷத்துக்குள் நுழைவது கடினம்" என்றார். அப்போது பேதுரு என்ற சீடன் சொன்னான்:  "நாங்கள் அனைத்தையும் விட்டு உம்முடன் வந்திருக்கிறோம்" என்று. அப்போது "என் பொருட்டாகவும் வேதத்தின் பொருட்டாகவும் எவனொருவன் வீட்டையேனும், உடன் பிறந்தாரையேனும், தாய் தந்தையரையேனும்  விட்டு வருகிறானோ, அவனுக்கு அவையனைத்தும் நூறு பங்கு பெருகிவரும். இஹத்தில் உடன்பிறந்தார், தாய்தந்தையர், பெண்டு பிள்ளைகள், பூமி-எல்லாம் திரும்பக் கிடைக்கும்; ஆனால் கொடுமை அனுபவிக்கவேண்டும். பரத்தில் நித்யவாழ்வு கிடைக்கும்; ஆனால் இப்போது முதற்பட்டிருப்போர் கடைப்படுவார்கள்" என்று யேசு சொன்னார்.

மேற்படி கதையை ஸ்ரீ காந்தி எடுத்துக் காட்டிச் சில தினங்களின் முன்பு பிரயாகையிலே ஒரு அர்த்த சாஸ்திர சபையின் முன்பு செய்த பிரசங்கத்தின் கருத்து என்னவென்றால்:-"ஐரோப்பியர் செல்வம் தேடுவதையே ஒரு பெரிய தர்மமாக நினைத்துவிட்டார்கள். அப்படி நினைத்தபடியால், அவர்களுக்குப்பலவித அஸௌகர்யங்கள் நேரிட்டன. நாம் செல்வத்தைப் பெரிதாக வைக்கக் கூடாது' என்பதேயாம்.