பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

12

சுல்5 (துளைத்தற் கருத்துவேர்)

சுல் சுல் - சூல். சூலுதல் = 1. தோண்டுதல்.

“நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை’’     (நாலடி. 44).

2. அறுத்தல் (யாழ்ப்.)

அறுத்தலும் ஒருவகைத் துளைத்தலே. கத்தியால் நீட்டுப் போக்காகப் பன்முறைமுன்னும் பின்னும் இழுத்துத் துளைத்தல் அறுத்தலும், செங்குத்தாக ஒரே அறையில் துளைத்துத்துணித்தல் அல்லது சிறிது துளைத்தல் வெட்டுதலும் ஆகும்.

சுல் - (சுன்) - சுனை = 1. உட்டுளையினின்று நீர் வருவது போன்ற நீரூற்று. 2. நீரூற்றுள்ள மலைக்குண்டு.

“வான்க ணற்றவன் மலையே வானத்து
மீன்க ணற்றதன் சுனையே’’         (புறம். 109)

3. நீரூற்றுள்ள பொய்கை (பிங்.).

சுனை - தெ. சொன, க. தொன. சுன் - சூன் = இரு வீட்டுச் சுவர்களின் இடைச்சத்து.

சுனை - (சொனை) - சோனை = 1. வானத்தினின்று நீரூற்றுச் சொரிவதுபோன்ற விடாப் பெரும் பெயல். “மேகஞ் சோனைபட’’ (கம்பரா. அயோத்தி. குகப். 20). 2. (சோனையாகப் பொழியும்) கார்முகில். “சோனைவார் குழலினார்’’ (கம்பரா. பால. நீர்விளை. 14). 3. மலையடிவார விடா மழைச்சாரல்.

தெ. சோன, க. சோனெ.

சோனைமாரி - சோனாமாரி - சோனாவாரி = விடாப் பெருமழை. “சோனாமாரியாய்ச் சொரிகிறதே’ என்பது உலக வழக்கு. “சோனை மாரியிற் சொரிந்தனன்’’ (கம்பரா. யுத்த. பிரமாத். 59).