பக்கம் எண் :

135

“கருமாணியா யிரந்த கள்வனே”                             (திவ். இயற்பா, 2:61)

மாண் - மாணவன் = சிறுவன், கற்குஞ் சிறுவன்.

மாணவன் - மாணவகன் - மாணவகம் = கல்வி.

மாணவகன் - மாணாக்கன்.

மாணவனைக் குறிக்கும் வேறு சில பெயர்களும் சிறுவன் சிறுமியைக் குறிப்பனவாகவே யுள்ளன.

ஒ.நோ: பிள்ளை = மாணவன், மாணவி. பள்ளிப் பிள்ளை என்னும் வழக்கைக் காண்க.

E. pupil, from L. pubillus, pupilla, dims of pupas, a boy; pupa. a girl.

E.pedant, from Gr. pais, paidos, a child.

மாணாக்கன் மாணாக்கி என்னும் வடிவங்களும், மாணவன் என்னும் சொல்லுக்கு நேர் மூலமான மாண் என்னும் வடிவமும், அதன் திரிபான மாணி என்பதும், இவற்றுக்கு அடிவழியான கொடி வழிச் சொற்களும், வடமொழியி லில்லை.

(4) உறைத்தல் துறை

உறைத்தல் என்பது அழுத்தித் தாக்குதல். ஆலங்கட்டியும் பெருமழைத்துளியும் நிலத்தில் வல்வேகமாய் விழுவதையும், ஒரு பேரொலி காதில் அழுத்தமாய்ப் படுவதையும், வெப்பம் காரம் புளிப்பு முதலியவை உடலையோ நாவையோ தாக்குவதையும், உறைத்தல் என்பர். இவற்றுள், முதலது பருமைத் தாக்கும் ஏனைய நுண்மைத் தாக்கும் ஆகும். இவையெல்லாம் தொடுதலின் வகைகளே. தொடுத லென்பது ஒன்று இன்னொன்றின் மேற்படுதல். பண்பி படுதலும் பண்பு படுதலும் எனப்படுதல் இருவகை. அழுத்தமாய்ப் படுதலே உறைத்தல்.

i. சுடுதல்

சுள்ளென்று குத்துகிறது என்பது போன்றே, சுள்ளென்று வெயிலடிக்கிறது என்பதும் வழக்கு. கூர்ங்கருவியாற் குத்துவது போன்றது வெம்மைத்தாக்கு.

உறைத்தல் = வெயில் உடம்பைத் தாக்குதல்.