பக்கம் எண் :

145

நாட்டுப்புறத்து மக்கள் இன்றும் தாமரையைத் தாம்பரை என்றே வழங்குவர். தாமரை என்பது செம்மலரையும் முளரி என்பது வெண்மலரையும் தொடக்கத்திற் குறித்ததாகத் தெரிகின்றது.

துள் - (தள்) - தளவு - தளவம் = செம்முல்லை.

தும் - (துவ்) - துவர் = சிவப்பு, காவி, பவழம், பாக்கு, காசுக்கட்டி. துவர்ப்பு = சிவப்பு, காசுக்கட்டி, அதன் சுவை.

துவர் - துவரி = காவி, இலவம்பூ.

துவரித்தல் = செந்நிறமூட்டுதல்.

துவர் - துவரை = செம்பயறு.

துவரை - தோரை = செங்காய்ப்பனை, அரத்தம்.

துவர் - தோர். நெய் + தோர் = நெய்த்தோர் = அரத்தம்.

துவர் - துகிர் = பவழம்.

துவள் - துவண்டை = காவியுடை.

அரன், சிவன், சேந்தன், சேயோன், சொக்கன் என்பன ஒரு பொருட் சொற்கள். கரியோன், கண்ணன், மாயோன், மால் முதலியவை திருமாலையும்; கரியோள் (கருப்பாய்), காளி, மாயோள், மாரி முதலியவை காளியையும்; கருமைபற்றிக் குறிக்கும் ஒருபொருட் சொற்களாயிருத்தலை நோக்குக. சொக்கன் என்பது அழகன் என்று பொருள்படுமேனும், சிவனைக் குறிக்கும்போது அப் பொருள் படாது.

viii. தெரிதல்

விளங்கும் (ஒளிரும்) பொருள்கள் தெளிவாகத் தெரிதலால், விளக்கத்தைக் குறிக்கும் சொற்கள் தெளிவாகத் தெரிதலைக் குறிக்கும்.

துலங்குதல் = விளங்குதல், தெளிவாகத் தெரிதல்.

துல் - தெல் - தென். தென்படுதல் = தெரிதல், தோன்றுதல், புலப்படுதல்.

துளங்குதல் = விளங்குதல்.

“துளங்கு மிளம்பிறை யாளன்”                             (தேவா. 88:10)

துளங்கொளி = மிக்கவொளி. துள் - துண் - துணி = ஒளி (பிங்.).

துள் - தெள். தெள்ளுதல் = விளங்குதல், தெளிவாதல்.