xxiv. உறைப்பு உறைப்பு என்னும் பண்புப் பெயர் விதந்து சுட்டுவது காரத்தையே. உறைக்கும் பொருளைச் சுள்ளென்றிருக்கிறது என்பர்: காரத்தை எரிச்சல் என்று கூறுவர். இதனால், உறைத்தலைச் சுடுதலோ டொப்பக் கொண்டமை புலனாம். உறு-உறை-உறைப்பு. உல்-எல்-எரி-எரிச்சல். (குள்)-கள்-கடு. கடுத்தல் = உறைத்தல். கடு = காரம். கடு-காட்டம் = உறைப்பு. கடு-கடி = காரம். கடி-கரி. கரித்தல் = உறைத்தல். கரி-கார்-கார்ப்பு. கார்-காரம், சுள் = உறைப்பு. சுள்ளம் = உறைப்பு. சுள்ளாப்பு = உறைப்பு. சுள்ளக்காய் = மிளகாய். சுள்ளிடுவான் = மிளகு, மிளகாய். சுள் - சுர்-சூர் = காரம், மிளகு. (நுள்)-நெள்-நெரி-நெரியல் = நெருப்புப்போல் எரியும் மிளகு. நெரியல் - மெரியல் - மிரியல் = மிளகு. நெரிப்பு - மெரிப்பு. தெலுங்கர் மிளகாயை மெரப்பக்காய் (மெரிப்புக்காய்) என்று கூறுதல் காண்க. முள் - முளகு - மிளகு. முளகாய் - மிளகாய். முளகு - முளகி - மிளகி = மிளகுச்சம்பா. xxv. கடும் புளிப்பு கடும்புளிப்பும் காரம்போல் காட்டமானதாகும். புளிப்பு முதிர்ந்த கள், “தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்” (புறம். 192) “அரவுவெகுண் டன்ன தேறல்” (புறம். 176) “பாப்புக் கடுப்பன்ன தோப்பி” (அகம். 348) என்று கூறப்படுதல் காண்க.
|