உகளுதல்=தாவுதல். உகளித்தல்=குதித்தல். குதித்தல்-தாவுதல், தாண்டுதல், கடத்தல், கூத்தாடுதல். குதி-குதிரை = தாவிச் செல்லும் விலங்கு. “கூற்றங் குதித்தலுங் கைகூடும்” (குறள். 269) என்பதில், குதித்தல் கடத்தல் (வெல்லுதல்.) குதி - கூத்து - கூத்தன். துள்ளுதல் = குதித்தல். துள்ளல் = கூத்தன். துள் - துள்ளி - துளி = துள்ளிவிழும் நீர்த்திவலை, சிற்றளவு. துள் -துள்ளம் = துளி. துளி - துமி. (தூண்டு) - தாண்டு. தாண்டுதல் = தாவுதல், குதித்தல், கடத்தல். “தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும்” என்பது பழமொழி. தாண்டு - தாண்டவம் = கூத்து. தாண்டு - தாண்டகம் - 24 எழுத்து ஆகிய அளவைத் தாண்டிச் செல்லும் அடிகளைக்கொண்ட செய்யுள். துமுக்கு (தெ.) = தாண்டு. (தூவு) - தாவு. தாவல் = தாண்டுதல். (4) தெளித்தல் தெளித்தலாவது ஒன்றை அள்ளி முன்னாக எறிதல் அல்லது இடுதல். நீரைத்தெளிக்கும்போது அது துளித் துளியாகத் துள்ளி விழுதலால், துள்ளுதற் கருத்தில் தெளித்தற்கருத்துப் பிறந்தது. உகுதல் = முன்துள்ளி விழுதல், சிந்துதல், உகுத்தல் (பி. வி.) = சிந்துதல்,தூவுதல். துளித்தல் = துளி விழுதல் (த.வி.); துளிகளைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல், சிந்துதல் (பி. வி.). துளி - தெளி. தெளித்தல் = துளித் துளியாய்ச் சிந்துதல்; மலர், அரிசிமுதலியவற்றைச் சிற்றளவாய்த் தூவுதல். தெளி - தெறி. தெறித்தல் = துளி துள்ளி விழுதல், துள்ளுதல், விரலினால்ஒன்றை முன்னோக்கிச் சுண்டுதல் அல்லது துள்ளச் செய்தல். |