(முல்) - மல் - மன்று - மன்றல் = வாசனை. மன்றுதல் - கூடுதல். மரு - மருந்து = நோய் தீர்க்கும் வாசனைத் தழை, நோய் தீர்க்கும் பொருள். முறு - வெறு - வெறி = மணம். வெறுத்தல் = கலத்தல், செறிதல். “வறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க” (நாலடி. 16) ix. இணையாதல் ஆணும் பெண்ணுமாக இருவர் அல்லது இரண்டு சேர்ந்து புணர்வதாலும், இயங்குதிணை யுயிரிகளிற் பெரும்பாலன ஆணும் பெண்ணுமாகக் கூடி வாழ்தலாலும், உழவிற்கும் வண்டிக்கும் அடிக்கடி இரு காளைகள் பூட்டப்படுவதாலும், கை கால் முதலிய சில வுறுப்புகள் இவ்விரண்டா யிருப்பதாலும், ஆடை முதலிய பொருள்கள் நன்கொடையில் பொதுவாக இணையாக வழங்கப்பெறுவதாலும், இணையைக் குறித்தற்குக் கலத்தலைக் குறிக்கும் சொற்களினின்று பல சொற்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. உத்தல் = பொருந்துதல். உத்தி = விளையாட்டிற்கு இருவர் சேரும் இணை. உத்திகட்டுதல் என்பது தென்னாட்டு வழக்கு. (உள்) - இள் - இழை - இணை. ஒ.நோ: தழல் - தணல். சுவள் - சுவடு - சோடு = இணை. சுவள் - சுவடி - சோடி = இணை. இருவரும் சுவடியாய்ப் போகின்றார்கள் என்பது தென்னாட்டு வழக்கு. (சுள்) - செள் - செண்டை = இரட்டை. செண்டை வரிசை = சச ரிரி கக என ஏழிசைகளும் இரட்டை இரட்டையாய் வருதல். சொதை - சதை = இணை. துணை = இணை, இரண்டு. துணங்கை = இரு கையுஞ் சேர்த்தடிக்குங் கூத்து. புணர் = இரண்டு. (4) கலங்கல் துறை கலக்கத்திற் கேதுவாகப் பல பொருள்கள் கலத்தல் கலங்கலாகும். |