படமும் எழுத்தும் பெரும்பாலும் வளைகோடுகளாலாவதால், வளைதற் கருத்தில் வரைதற் கருத்துப் பிறந்தது. இருதிணை யுயிரிகளின் உடம்பிலும் இயல்பாகக் காணப்படும் கோடுகள் பொதுவாக வளைந்தே யிருத்தலின், கோடு என்னும் பெயர் முதலாவது வளைகோட்டையே குறித்துப் பின்பு ஒப்புமைபற்றி நேர் கோட்டையும் குறித்தது. கோடுதல் = வளைதல். கோடு = வளைகோடு, வரி (கோடு). வரிக்குதிரை வரிப்புலி முதலியவற்றின் கோடுகளை நோக்குக. வள் - வர் - வரி. வரிதல் = வளைதல், வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். வரி = வளைகோடு, கோடு, கோட்டுவடிவான எழுத்து, வரைவு, வரணனை, வரணிக்கும் பாட்டு அல்லது காதற்பாட்டு, கட்டு. ஆற்றுவரி கானல்வரி முதலிய இசைப்பாட்டு வகைகளை நோக்குக. வரித்தல் = எழுதுதல், வரைதல், பூசுதல், காதலியின் தோளிலும் மார்பிலும் வரைதல், அவளை மணத்தல், வளைத்து அல்லது சுற்றிக்கட்டுதல்; வரி - வரன் = மணவாளன். வரி - வரணம் (வரி+அணம்) = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், குலம், வகை, ஓசைவகை, பண், பாட்டு. வரணம்(வ.) - வரணி (வ.). வரணித்தல் = வரைதல், சொல்லால் வரைதல். வரணி - வரணனை (வரணி+அனை). வரணம் வரணி வரணனை என்பன தென் சொல்லடியாய்ப் பிறந்த வடநாட்டுச் சொற்கள். வள் - வண் - வண்ணம் = எழுத்து, வரைவு, பூச்சு, நிறம், வகை, செய்யுள், ஓசைவகை. வண்ணம் - வண்ணகம் = அராகம் என்னும் வண்ணவுறுப்பு. வண்ணக வொத்தாழிசைக்கலி தொன்றுதொட்டு வழங்கும் தமிழ்ச் செய்யுள் வகை. |