பக்கம் எண் :

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

விடுவேன்’’, “குடலை மாலையாகப் போட்டுவிடுவேன்’’ என்பன போன்ற அச்சுறுத்துகள், அநாகரிகக் காலப் போர்க்களங்களில் செயலளவாய் நிகழ்ந்தவையே.

10. கருத்து

வைசூரிக்கு அம்மை யென்னும் பெயரிருப்பதால், காளி யம்மையினால் அந் நோய் வருவதாக நம்முன்னோர் கருதினர் என்றறியலாம். இன்னும் அக் கருத்து; பலர்க்கு நீங்கவில்லை. ‘அம்மை வந்திருக்கிறாள்’, ‘அம்மை விளையாடுகிறாள்’ முதலிய வழக்குகளும், வைசூரி வந்தவுடன் காளிக்குச் செய்யப்படும் சிறப்புகளும் அதை விளக்கும்.

முதுவேனிலில் தோன்றும் பாலை நிலத்திற்குத் தெய்வம் காளியாதலாலும், அவ் வம்மையை ஓர் அழிப்புத் தெய்வமாக மக்கள் கொண்டதினாலும், வெப்பமிகுதியால் தோன்றிப் பலவுயிரைக் கொள்ளைகொள்ளும் வைசூரி நோயைக் காளியால் வருவதென்று கருதி, அதை அத் தெய்வத்தின் பெயரால் அம்மை என்றே அழைத்தனர் முன்னோர்.

நல்லவர் பொருட்டு மழைபொழிந்து நாடு செழிக்கிற தென்றும், தீயவரையிட்டு மழை பொய்த்துப் பஞ்ச முண்டாகிற தென்றும் பண்டையோர் கருதினர்.

“ ....................தொல்லுலகில்
  நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்
  டெல்லார்க்கும் பெய்யும் மழை’’                                         (மூதுரை, 10)

“ நாடா கொன்றோ காடா கொன்றோ
  அவலா கொன்றோ மிசையா கொன்றோ
  எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்லை வாழிய நிலனே’’                                      (புறம். 187)

என்னும் ஒளவையார் கூற்றுகள் இதைப் புலப்படுத்தும்.

மழை பொய்த்த காலத்தில், அதற்குக் காரணம் ஒரு கொடும் பாவியென்று கருதி, ஊருக்குள்மிகத் தீயவன் என்று பேர்பெற்ற ஒருவனைக் கட்டி ஊருக்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் உயிரோடெரித்து விடுவது முதுபண்டை வழக்கம். இதற்குக் கொடும்பாவி கட்டியிழுத்தல் என்று பெயர்.