“ மாவும் மாக்களும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ (மரபியல், 32) “ மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’’ (மரபியல், 33) என்று தொல்காப்பியரும், “ செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்’’ (குறள். 420) “ மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்’’ (குறள். 1071) எனத் திருவள்ளுவரும், மாந்தரை மக்கள் மாக்கள் என இருவகைப் படுத்திக் கூறுதல் காண்க. மாந்தன் இயற்ற முடியாத இயற்கையை இயற்றிய ஒரு தலைவன் இருத்தல் வேண்டுமென்றும், அவன்எல்லாவற்றையுங் கடந்தவன் என்றும், கண்டு அல்லது கொண்டு அவனைக் கடவுள்3 என்றனர் முதற்றமிழர். மக்கள் குடியிருக்கும் மனைக்குத் தமிழில் வீடு என்று பெயர்; பேரின்ப உலகிற்கும் வீடுஎன்றே பெயர். இவ்விரு பெயரும் ஒரு சொல்லே. மாந்தன் பகலெல்லாம் உழைத்துக் களைத்து உணவு அல்லது பொருள் தேடி, மாலைக்காலத்தில் மனையாகிய வீட்டை யடைந்து இளைப்பாறி யின்புறுகின்றான்; உழைப்பாளி போன்றே ஒருநாள் வழிப்போக்கனும் பகலெல்லாம் நடந்திளைத்து இராக்காலத்தில் ஒரு வீட்டில் தங்கி இளைப்பாறி யின்புறுகின்றான். வேலையை விடுதலுக்கும் வழிநடையை விடுதலுக்கும் வீடு என்று பெயர். ‘விடுமுறை’, ‘விட்டிறுத்தல்’ என்னும் வழக்குகளையும் நோக்குக. எழுவகையான எல்லையற்ற பிறவிகளில் உழன்று அறத்தை ஈட்டிய ஆன்மா, அல்லது அப் பிறவிகளில்அலைந்து திரிந்து வீட்டுநெறிச் செலவை முடித்த ஆன்மா, அடையும் பேரின்ப வுலகும் வீடுபோலுதலின் வீடெனப் பட்டதென்க. 3. கடவுள் என்னும் பெயர்க்கு ‘எல்லாவற்றையும் இயக்குபவன் அல்லது செலுத்துபவன்’ என்றும் பொருளுரைக்கலாம். கடவுதல் = செல்லுதல். |