தொடர்புரை 1.
புத்தர் தோத்திரப் பாக்கள்.
வீரசோழிய உரை, நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப்பற்றிய பாடல்கள் பல காணப்படுகின்றன: அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துக் கீழே தருகின்றோம். அவற்றின் சொல்லழகு பொருளழகுகளைச் சுவைத்து இன்புறுக :- 1. போதி, ஆதி, பாதம், ஓது ! 2. போதிநிழற் புனிதன் பொலங்கழல் ஆதி உலகிற் காண் ! 3. மாதவா போதி வரதா வருளமலா பாதமே யோது சுரரைநீ - தீதகல மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த் தாயா யலகிலரு டான் ! 4. உடைய தானவர் உடைய வென்றவர் உடைய தாள்நம சரணம் ஆகுமே !
5. பொருந்து போதியில் இருந்த மாதவர் திருந்து சேவடி மருந்தும் ஆகுமே !
6. போதி நீழற் சோதி பாதம் காத லால்நின் றோதல் நன்றே !
7. அணிதங்கு போதி வாமன் பணிதங்கு பாதம் அல்லால், துணிபொன் றிலாத தேவர் மணிதங்கு பாதம் மேவார் ! 8. விண்ணவர் நாயகன் வேண்டக் கண்ணினி தளித்த காதற் புண்ணியன் இருந்த போதி நண்ணிட நோய்நலி யாவே !
9. போதி மேவினை ! புன்மை அகற்றினை ! சோதி வானவர் தொழஎழுந் தருளினை ! ஆதி நாத ! நின் அடியிணை பரவுதும் ! 10. மருள் அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால் !--என்செய்கோ யான் ! அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால் !--என்செய்கோ யான் ! பொருள் அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால் !--என்செய்கோ யான் ! 11. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர் வாடாத போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல் கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளும் முயல்வார் வீடாத இன்ப நெறிசேர்வர் ! துன்ப வினைசேர்தல் நாளும் இலரே ! 12. தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய துணைவர் எனலாம் எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள் இறைவர் இடமாம் குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனும் எவரும் தொழுதகைய இமையவரும் அறம்மருவு துதிசெய்தெழு துடித புரமே ! 13. மணியிலகு செறிதளிரொ டலர்ஒளிய நிழல் அரசின் மருவி அறவோர் பிணிவிரவு துயரமொடு பிறவிகெட உரைஅருளும் பெரிய அருளோன் துணியிலகு சுடருடைய அரசரொடு பிரமர்தொழு தலைமை யவர்மா அணியிலகு கமலமலர் அனையஎழில் அறிவனிணை அடிகள் தொழுவாம் ! 14. எண்டிசையும் ஆகி இருள் அகல நூறி எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து மழுமருவு போதி உழை நிழல்கொள் வாமன் வெண்டிரையின் மீது விரிகதிர்கள் நாண வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு புண்டரிக பாதம் நமசரணம் ஆகும் என முனிவர் தீமை புணர்பிறவி காணார் ! 15. கூர்ஆர் வளைஉகிர் வாள் எயிற்றுச் செங்கட் கொலை உழுவை காய்பசியால் கூர்ந்த வெந்நோய்நீங்க ஓர்ஆ யிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி உளம்விரும்பிச் சென்றாங் கியைந்தனைநீ என்றால், கார்ஆர் திரைமுளைத்த செம்பவளம் மேவுங் கடிமுகிழ்த் தண்சினைய காமருபூம் போதி ஏர்ஆர் முனிவரர்கள் வானவர்தங் கோவே ! எந்தாய் ! அகோ ! நின்னை ஏத்தாதார் யாரே ! 16. மிக்கதனங் களைமாரி மூன்றும் பெய்யும் வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும் வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே ! 17. வான்ஆடும் பரியாயும் அரிண மாயும் வணக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான் தானாயும் பணைஎருமை ஒருத்த லாயும் தடக்கை இளங் களிறாயும் * சடங்க மாயும் மீனாயும் முயலாயும் அன்ன மாயும் மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க மானாயும் கொலைகளவு கள்பொய் காமம் வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே ! 18. ஆதியங் கடவுளை ! அருமறை அருகனை ! போதியங் கிழவனை ! பூமிசை ஒதுங்கினை ! போதியங் கிழவனை ! பூமிசை ஒதுங்கிய சேதியஞ் செல்வ ! நின் திருவடி தொழுதனம் ! 19. பைங்கண்வாள் எயிற்றினப் பகட்டெருத்தின் வள்உகிர்ப் பரூஉத்திரட் குரூஉக்கொடாட் பாலுடைச் செனாவுடைச் சிங்கஏறு நான்குதாங்க மீதுயர்ந்த சேயொளிச் சித்திரங் குயிற்றிநாறு செம்பொனாச னத்தின்மேல் கொங்குநாறு போதுசிந்தி வானுளோர் இறைஞ்சிடக் கோதிலா அறம்பகர்ந் தமர்ந்தகோன் குளிர்நிழற் பொங்குதாது கொப்புளித்து வண்டுபாடு தேமலர்ப் போதிஎம் பிரான் அடிக்கண் போற்றின்வீட தாகுமே ! 20. வீடுகொண்ட நல்அறம் பகர்ந்துமன் பதைக்கெலாம் விளங்குதிங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன் மோடுகொண்ட வெண்நுரைக் கருங்கடற் செழுஞ்சுடர் முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின் ஆடுகின்ற மூவகைப் பலங்கடந்து குற்றமான ஐந்தொடங்கொர் மூன்றறுத்த நாதனாள் மலர்த்துணர்ப் பீடுகொண்ட வார்தளிர்ப் பிறங்குபோதி யானைஎம் பிரானைநாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே !
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா.
(தரவு.)
21. திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக உருமேவி அவதரித்த உயிர்அனைத்தும் உயக்கொள்வான் இவ்வுலகும் கீழுலகும் மிசையுலகும் இருள்நீங்க எவ்வுலகும் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடர்என்ன விலங்குகதிர் ஓர் இரண்டும் விலங்கிவலங் கொண்டுலவ அயங்குசினைப் போதிநிழல் அறம்அமர்ந்த பெரியோய் நீ !
(தாழிசை.)
1. மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இருபுயங்கள் மாரவனிதை யர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே ! 2. 'வேண்டினர்க்கு வேண்டினவே அளிப்பபென'ன மேலைநாள் பூண்டஅரு ளாள ! நின் புகழ்புதிதாய்க் காட்டாதோ !
3. உலகுமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறி அழுங்கப் புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே ! 4. பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி மாதவன்நீ என்பதற்கோர் மறுதலையாக் காட்டாதோ ! 5. கழல்அடைந்த உலகனைத்தும் ஆயிரம்வாய்க் கடும்பாந்தள் அழல்அடைந்த பணத்திடைஇட் டன்றுதுலை ஏறினையே ! 6. மருள்பாரா வதம்ஒன்றே வாழ்விக்கக் கருதியநின் அருள்பாரா வதஉயிர்கள் அனைத்திற்கும் ஒன்றாமோ !
(அராகம்.)
1. அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை எரிசுடர் மரைமலர் எனவிடும் அடியினை ! 2. அகலிடம் முழுவதும் அழல்கெட அமிழ்துமிழ் முகில்புரி இமிழ்இசை நிகர்தரும் மொழியினை !
(ஈரடி அம்போதரங்கம்.)
1. அன்பென்கோ ! ஒப்புரவென் கோ ! ஒருவன் அயில்கொண்டு முந்திவிழித் தெறியப்பால் பொழிந்தமுழுக் கருணையை 2. நாணென்கோ ! நாகமென்கோ ! நன்றில்லான் பூணுந் தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை !
(ஓரடி அம்போதரங்கம்.)
1. கைந்நாகத் தார்க்காழி கைக்கொண் டளித்தனையே ! 2. பைந்நாகர் குலம்உய்ய வாய்அமிழ்தம் பகர்ந்தனையே ! 3. இரந்தேற்ற படைஅரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே ! 4. பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே !
(தனிச்சொல்.)
எனவாங்கு
(சுரிதகம்.)
அருள்வீற் றிருந்த திருநிழற் போதி முழுதுணர் முனிவ!நிற் பரவுதும் தொழுதக ஒருமனம் எய்தி இருவினைப் பிணிவிட்டு முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந் தோங்குநீர் உலகிடை யாவரும் நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே !
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா.
(தரவு.)
22. மண்வாழும் பல்லுயிரும் வானவரும் இமையவரும் கண்வாழும் மாநாகர் கிளைஅனைத்தும் களிகூர அந்தரதுந் துபிஇயங்க அமரர்கள் நடம்ஆட இந்திரர்பூ மழைபொழிய இமையவர்சா மரையிரட்ட முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரிஅணைமேல் மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த ஒருபெரியோய் !
(தாழிசை.)
1. எறும்புகடை அயன்முதலா எண்ணிறந்த என்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி எவ்வுடம்பில் எவ்வுயிர்க்கும் யாதொன்றால் இடரெய்தின் அவ்வுடம்பின் உயிர்க்குயிராய் அருள்பொழியும் திருவுள்ளம் ! 2. அறங்கூறும் உலகனைத்தும் குளிர்வளர்க்கும் மழைமுழக்கின் திறங்கூற வரைகதிரும் செழுங்கமலம் நனிநாண ஒருமைக்கண் ஈர்ஒன்பான் உரைவிரிப்ப உணர்பொருளால் அருமைக்கண் மலைவின்றி அடைந்ததுநின் திருவார்த்தை ! 3. இருட்பார வினைநீக்கி எவ்வுயிர்க்கும் காவலென அருட்பாரம் தனிசுமந்த அன்றுமுதல் இன்றளவும் மதுஒன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுஅன்றி நினக்குரித்தோ புண்ணிய ! நின் திருமேனி !
(பேரெண்.)
1. ஆருயிர்கள் அனைத்தினையும் காப்பதற்கே அருள் பூண்டாய் ! ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவிங் கென்னாகும் ! 2. தாமநறுங் குழல்மழைக்கண் தளிரியலார் தம்முன்னர்க் காமனையே முனந்தொலைத்தால் கண்ணோட்டம் யாதாங்கொல் !
(சிற்றெண்.)
1. போர்அரக்கர் ஓர் ஐவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே ! 2. ஆர்அமிழ்தம் மணிநாகர் குலம் உய்ய அருளினையே ! 3. வார்சிறைப்புள் அரையர்க்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே ! 4.. பார்மிசை ஈரைந்தும் பாவின்றிப் பயிற்றினையே !
(இடையெண்.)
அருளாழி நயந்தோய் நீஇ ! அறவாழி பயந்தோய் நீஇ ! மருளாழி துறந்தோய் நீஇ ! மறையாழி புரந்தோய் நீஇ ! மாதவரில் மாதவன் நீஇ ! வானவருள் வானவன் நீஇ ! போதனரிற் போதனன் நீஇ ! புண்ணியருட் புண்ணியன் நீஇ !
(அளவெண்.)
ஆதி நீஇ ! அமலன் நீஇ ! அயனும் நீஇ ! அரியும் நீஇ ! சோதி நீஇ ! நாதன் நீஇ ! துறைவன் நீஇ ! இறைவன் நீஇ ! அருளும் நீஇ ! பொருளும் நீஇ ! அறிவன் நீஇ ! அநகன் நீஇ ! தெருளும் நீஇ ! திருவும் நீஇ ! செறிவும் நீஇ ! செம்மல் நீஇ !
(தனிச்சொல்.) எனவாங்கு (சுரிதகம்.)
பவளச் செழுஞ்சுடர் மரகதப் பாசடைப் பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும் போதியந் திருநிழற் புனித ! நிற் பரவுதும் மேதகு நந்தி புரிமன்னர் சுந்தரச் சோழர் வண்மையும் வனப்புந் திண்மையும் உலகில் சிறந்துவாழ் கெனவே !
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா. (தரவு.)
23. பூமகனே முதலாகப் புரந்தரர் எண்திசையும் தூமலரால் அடிமலரைத் தொழுதிரந்து வினவியநாள் காமமுங் கடுஞ்சினமுங் கழிப்பரிய மயக்கமுமாய்¢த் தீமைசால் கட்டுரைக்குத் திறற்கருவி யாய்க்கிடந்த நாமஞ்சார் நமர்களுக்கு நயப்படுமா றினிதுரைத்துச் சேமஞ்சார் நன்னெறிக்குச் செல்லுமா றருளினையே !
(தாழிசை.)
1. தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி ஊனமொன் றில்லாமை ஒழிவின்றி இயற்றினையே ! 2. எண்பத்தொன் பதுசித்தி இயல்பினால் உள என்று பண்பொத்த நுண்பொருளைப் பார்அறியப் பகர்ந்தனையே ! 3. துப்பியன்ற குணத்தோடு தொழில்களால் வேறுபட முப்பதன்மேல் இரண்டுகலை முறைமையால் மொழிந்தனையே !
(அராகம்.)
1. ஆதியிம் இடையினோ டிறுதியும் அறிகுவ தமரரும் முனிவரும் அரிதுநின் நிலைமையை ! 2. மீதியல் கருடனை விடஅர வொடுபகை விதிமுறை கெடஅறம் வெளியுற அருளினை ! 3. தீதியல் புலியது பசிகெடு வகைநின திருஉரு அருளிய திறமலி பெருமையை ! 4. போதியின் நலமலி திருநிழ லதுநனி பொலிவுற அடியவர் இடர்கெட அருளினை !
(பேரெண்.)
1. திசைமுகன் மருவிய கமலநல் நிறமென வசைஅறு முனிவொடு மலியும் நின்அடி ! 2. உயர்வுறு பெருமையொ டயரறு மயர்வொடு புரைஅறு நலனொடு பொலியும் நின்புகழ் !
(சிற்றெண்.)
1. கற்புடை மாரனைக் காய்சினந் தவிர்த்தனை ! 2. பொற்புடை நாகர்தந் துயரம் போக்கினை ! 3. மீனுரு ஆகி மெய்ம்மையிற் படிந்தனை ! 4. மானுரு ஆகி வான்குணம் இயற்றினை !
(இடையெண்.)
எண்ணிறந்த குணத்தோய் நீஇ ! யாவர்க்கும் அரியோய் நீஇ ! உண்ணிறைந்த அருளோய் நீஇ ! உயர்பார நிறைத்தோய் நீஇ ! மெய்ப்பொருளை அறிந்தோய் நீஇ ! மெய்யறம்இங் களித்தோய் நீஇ ! செப்பரிய தவத்தோய் நீஇ ! சேர்வார்க்குச் சார்வு நீஇ !
(அளவெண்.)
நன்மை நீஇ ! தின்மை நீஇ ! நனவும் நீஇ ! கனவும் நீஇ ! வன்மை நீஇ ! மென்மை நீஇ ! மதியும் நீஇ ! விதியும் நீஇ ! இம்மை நீஇ ! மறுமை நீஇ ! இரவும் நீஇ ! பகலும் நீஇ ! செம்மை நீஇ ! கருமை நீஇ ! சேர்வும் நீஇ ! சார்வும் நீஇ !
(தனிச்சொல்.)
எனவாங்கு (சுரிதகம்..)
அலகிலா நின்றன் அடிஇணை பரவுதும், வெல்படைத் தொண்டைமான் விறற் சேனாபதி சிங்களத் தரையன் வெண்குடை யதனொடு பொங்குபுகழ் வில்லவன்றன் புறக்கொடை கண்டு பொலிதரு சேந்தன் பொன்பற்றி காவலன் மலிதரு பார்மிசை, மன்னுவோன் எனவே.
______________________________________________________________________ * சடங்கம்= ஊர்க்குருவி. |