பக்கம் எண் :

58

பெரியோர் வாழ்விலே


     இராயப்பேட்டையில் அன்று திருவிழா. மக்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். ஒரு
வீதி வழியாக சுவாமி வலம் வந்துகொண்டிருந்தது.

     அந்த வீதியில் ஒரு வீட்டின் முன்னால் வந்ததும் சுவாமி நின்றது. அந்த வீட்டின்
வாயிலில் ஒரு கூடை நிறையத் தேங்காய்கள் வைத்திருந்தார்கள். சுவாமிக்குத் தேங்காய்
உடைப்பதாக அவர்கள் வேண்டிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு தேங்காயாக எடுத்துத்
தரையில் ஓங்கி அடித்தார்கள். தேங்காய்கள் உடைபட்டுச் சிதறி நாலா பக்கமும் போய்
விழுந்தன.

     அப்போது, அங்கே சில சிறுவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில்
திரு.வி.க.வும் ஒருவர். அப்போது அவருக்கு வயது பதின்மூன்று. அவர்களில் ஒருவன்
மற்றவர்களைப் பார்த்து, “அதோ ஏராளமான தேங்காய்களை உடைக்கிறார்கள். நாம்
எல்லோரும் ஓடிப்போய், உடைபடும் தேங்காய்களை எடுக்க வேண்டும். எவன் அதிகமாக
எடுக்கிறானோ, அவனே பலசாலி... என்ன, நான் சொன்னபடி செய்யலாமா?” என்று
கேட்டான். உடனே எல்லோரும் ‘சரி’ என்றார்கள்.

     மறுவிநாடி, தேங்காய்கள் உடைக்கும் இடத்தை நோக்கி ஓடினார்கள். உடைபடும்
தேங்காய்களைப் பாய்ந்து பொறுக்கினார்கள். முக்கால் பங்கு தேங்காய்கள் தீர்ந்துவிட்டன.
அப்போது எல்லோரையும் விட அதிகமாக எடுத்திருந்தவர் திரு.வி.க.தான்.
மற்றவர்களுக்கெல்லாம் அவர் மீது பொறாமை. தேங்காய் உடைப்பவருக்குக் கூட அவர்
மீது ஏனோ கோபம் உண்டாகிவிட்டது.